வழக்கறிஞர் நிலா பதிலளிக்கிறார்
வாடகை வீடு, குத்தகை வீடு ஆகிய இரண்டும் ஒன்று என்றே பலரும் நினைக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டவை என்று விளக்கம் தருகிறார் வழக்கறிஞர் நிலா.
இது குறித்து பேசும் நிலா, ‘’முதலில் வாடகை வீடு பற்றி அறிந்துகொள்வோம். வாடகை என்பது குறுகிய கால ஒப்பந்தம் கொண்டது. அதாவது 6 மாதங்கள் அல்லது 11 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும். இதையடுத்து இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கலாம் அல்லது புதுப்பிக்க முடியாமல் போகலாம். அதேபோன்று வாடகை எனும் பட்சத்தில் பொதுவாக 1 முதல் 3 மாத வாடகை அளவிற்கு முன்பணமாக பெறப்படுகிறது. உரிமையாளர் அல்லது வாடகையாளர் ஒப்புக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வாடகை ஒப்பந்தத்தை முடிக்கலாம். இதில் பிரச்னை ஏற்படுகையில், இந்திய வாடகை சட்டம் (Indian Rent Control Act) பயன்படுத்தப்படுகிறது.
அடுத்ததான குத்தகை அல்லது லீஸ் என்பது ஒரு வகையில் நீண்டகால ஒப்பந்தம் ஆகும். குறைந்தது ஒரு வருடம் முதல் அதற்கு அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. இதனை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஒரு பெரிய தொகை முன் தொகை போன்று கட்டப்படுகிறது. இதனால் மாதம் மாதமாக வாடகை கட்ட வேண்டிய தேவையில்லை. இதில் பிரச்னை வருகையில், இந்தியக் குத்தகை சட்டம் (Transfer of Property Act, 1882) பொருந்துகிறது. இந்த ஒப்பந்த காலம் முடியும் வரை உரிமையாளர் வீட்டை கேட்க முடியாது, இல்லையெனில் சட்டப்படி செல்ல வேண்டும். பொதுவாக வசிப்பதற்கு வீடு வாடகையாகவும், கடை போன்ற வணிகப் பயன்பாடுகள் லீஸ் முறையிலும் பதிவு செய்யப்படுகின்றன..’ என்கிறார்.
இது போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுயுகம் தொலைக்காட்சியில், சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியில் விடை கிடைக்கிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. பிரபல வழக்கறிஞர்கள் தினமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் சந்தேகம் தீர்க்கிறார்கள். போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.
ஞானகுரு இணையத்திலும் உங்கள் கேள்விகளை அனுப்பிவையுங்கள். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.