அழகு ரகசியம்
புதிய இடத்துக்குச் செல்லும் போது ஆளுக்கு கிடைக்கும் மரியாதையை விட, ஆடைக்கு கிடைக்கும் மரியாதையே அதிகம். இன்றும் தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், வேட்டி கட்டியிருந்தால் அனுமதி கிடைப்பதில்லை. அதுபோலவே ஷு போடாத கணவான்களை மது அருந்தும் அறைக்குள் அனுமதிப்பதில்லை. இதெல்லாம் ஆட்களை எடைபோட முக்கியமான தகுதிகளாக பார்க்கப்படுகிறது.
அதனால் ஆடைக்கும் அணிகலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே தீரவேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. பட்டுப்புடவை கட்டி, புதுமையான தலை அலங்காரம் செய்து நகைகள் அணியவில்லை என்றால், அத்தனை அழகும் பாழாகி விடும். பட்டுப் புடவைக்கு ஏற்ப கற்களால், முத்துக்களால், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றால் அலங்கரிக்கும்போது அழகு அதிகரிக்கிறது. அதேநேரம், நேரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப உடையும், நகையும் அணிய வேண்டும் என்பதும் முக்கியம்.
நிறைய நகைகள் இருக்கின்றன என்பதற்காக இருக்கும் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்வது அழகுக்கு இலக்கணமல்ல. ஏனென்றால் இப்போது திருமணங்களுக்குகூட குறைவான நகைகள் அணிவதுதான் ஃபேஷன்.
என்ன உடை?
குளித்து முடித்து அலங்காரம் செய்யும் நேரத்தில் கண்ணாடியின் முன் உட்கார்ந்து கொண்டு என்ன உடை அணிவது, என்ன நகை அணிவது என்று யோசிப்பவர்கள்தான் அதிகம். இதுதான் அழகின்மைக்கு அடிப்படைக் காரணம். ஆம், முதல் நாள் இரவே, செல்ல வேண்டிய இடம், நேரம், அங்கே இருக்க ஆகும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து அதற்கேற்ப ஆடைகளையும், அணிய வேண்டிய நகைகளையும் எடுத்து வைத்துவிட வேண்டும், குறைந்தபட்சம் மனதிலாவது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உடை, நகை மட்டுமின்றி போடவேண்டிய ஹேண்ட் பாக், செருப்பு, பூ, பொட்டு போன்றவற்றையும் முன்னரே தீர்மானித்து விட்டால், அலங்காரத்திற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ள முடியும்.
கழுத்து:
செயின், நெக்லஸ் போன்றவை அணிவதற்கு உடல் அமைப்பும் முக்கியமாகும். கழுத்து சிறியதாக இருந்தால் கழுத்தை இறுகப்பிடிக்கும் நெக்லஸ் அணிந்தால் கழுத்தை மேலும் குட்டியாகக் காட்டும். அதனால் இந்த வகை கழுத்து உள்ளவர்கள் மிகுந்த மெலிதான செயின் அல்லது குட்டி நெக்லஸையும், ஒற்றைச் சங்கிலியையும், நீளமான தோடுகளையும் அணிந்தால் நன்றாய் இருக்கும்.
நீளமான கழுத்துள்ளவர்கள் சிறிய டாலர் உள்ள கழுத்தை ஒட்டிய செயின், கழுத்தை ஒட்டிய நெக்லஸ், சிறிய காது தோடும் அணிந்தால் எடுப்பாகத் தெரிவார்கள். இதுபோலவே வட்ட முகத்திற்குச் சிறிய வட்டமான வளையம் அணிந்தால் அழகாய் இருக்கும். பெரிய முகமாய் இருந்தால் கனமான, பெரிய அணிகலன்களை அணிவது பொருத்தமாக இருக்கும்.
நமக்குப் பொருத்தமாய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு நகைகளை வாங்குவது நல்லது. அழகாக இருக்கிறதே என்று வாங்கிக் கொண்டு, பின்னர் அதனை வாங்கிவிட்டோமே என்பதற்காக அணிய வேண்டாம்.