மருத்துவ அதிசயம்
பொதுவாக இதயத் துடிப்பு நின்றுபோவதை அடுத்து மரணம் என்று அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு உடல் பாகங்களும் அடுத்தடுத்து செயல்படுவது நின்று போகின்றன. இந்த நேரத்தில் மூளை என்ன செய்கிறது என்பது புரியாத புதிராக இருந்தது.
இந்த நேரத்தில் மூளையால் எதுவும் செய்ய முடியாது, செய்வதில்லை என்பதே பலருடைய கருத்தாக இருந்தது. ஆனால், மரணத்தருவாய்க்குச் சென்று திரும்பிய பலருடைய அனுபவங்களைக் கேட்ட பிறகு, ஆய்வாளர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
உயிர் ஆபத்திலிருந்து தப்பியவர்கள், ‘உடலில் இருந்து ஒளி வெளியேறியது, மிகவும் பிரகாசமான ஒளியை பார்க்க முடிந்தது, வானில் மிதப்பது போன்று இருந்தது’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல், மிகவும் ஆபத்தான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தவர்கள், மயக்க நிலையில் இருந்தாலும் மருத்துவர்கள் பேசிய சில விஷயங்களை நினைவுகூர முடிந்தது.
இவற்றை ஆய்வு செய்த மருத்துவர்கள், மரணத் தருவாயில் மூளை பலமடங்கு வேகமாக பணி செய்கிறது. அதனால் உயிருக்குப் போராடும் நபர்களின் பார்வைத் திறனுக்கான மூளையின் விஷ்வல் கார்டெக்ஸ் பகுதி மிகவும் கூர்மையடைகிறது. அதனாலே, அவர்களால் பிரகாசமான ஒளியைக் காண முடிகிறது. அதேபோல், பேச்சு மற்றும் மொழி உணர்வுக்குக் காரணமான மூளைப் பகுதியின் ஹாட் ஸோன் மண்டலம் அதிக சுறுசுறுப்படைகிறது. அதனாலே, மயக்கத்தில் இருந்தாலும், தன்னைச் சுற்றி பேசப்படுவதை கிரகிக்க முடிகிறது என்கிறார்கள்.
ஆக, மூளை தனது செயல்பாடுகளை அத்தனை எளிதில் நிறுத்துவதில்லை. உடலுக்கு எந்தவொரு பிரச்னை என்றாலும் கூடுதலாக செயலாற்றி உயிர் பிழைக்க வைக்கப் போராடுகிறது என்கிறார்கள்.
அடேங்கப்பா, மூளைக்கு எத்தனை வலிமை?