ஞானகுரு தரிசனம்
குற்றாலம் பயணத்தை எதிர்பார்க்காத கார் டிரைவர் சுந்தரம், மனதில் எக்கச்சக்க கோபத்துடன் சுறுசுறுவென கோபம் வருவதையும், அதை அப்படியே அடக்கிக்கொள்வதையும் கவனித்தார் ஞானகுரு. அந்த கோபத்தை கார் ஓட்டுவதில் காட்டினார்.
முன்னே சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் ஓவர்டேக் செய்து முன்னேறிக் கொண்டிருந்த சுந்தரம், ஒரு லாரியை முந்த முடியாமல்… அதன் வேகத்திலேயே பின் தொடர்ந்தார்.
இத்தனை அவசரம் வேண்டாமே என்று ஞானகுரு சொன்னதும், ‘‘நாற்பது வருஷமா வண்டி ஓட்டுறேன்… டிரைவிங் பத்தி யாரும் சொல்லித்தர வேண்டாம்…’’ என்று சொன்ன பதிலில் கோபம் எதிரொலித்தது. கோபம் அதிகரிக்கும்போது, முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும். அப்படித்தான் ஆனது சுந்தரத்திற்கு. முன்னே சென்ற லாரி வேகம் குறைப்பதைக் கணிக்காமல் விட்டதால், லாரியின் பின்புறத்தில் கார் சட்டென்று மோதியது. அந்த வேகத்தில் திக்குதெரியாமல் திசைமாறி பாதையில் இருந்து விலகி… கண்ணை மூடித் திறப்பதற்குள் ரோட்டோரத்தில் இருந்த ஒரு பெரிய புளிய மரத்தில் முட்டி நின்றது.
மோதிய காருக்குள் உருண்டு, முட்டி மோதி எழுந்த ஞானகுருவுக்கு நெற்றி, கை, கால்களில் அடிபட்டது. கண்ணுக்கு மேல் புறத்தில் இருந்து ரத்தம் வழிந்து, கண்களை மறைத்தது. ஆனாலும், தனக்கு எதுவும் நேரவில்லை என்று உடல் உறுதியுடன் சொல்லவே, சட்டென ரத்தத்தை வழித்துப் போட்டுவிட்டு, சுந்தரத்தைக் கவனித்தார்.
சுந்தரம் ஸ்டீரியங்கில் சாய்ந்தபடி மயக்கமடைந்திருந்தார். அதற்குள் சத்தம் கேட்டு ஓடோடி வந்த சிலரது உதவியுடன் சுந்தரத்தை காரில் இருந்து வெளியே இழுத்து, மரத்தடியில் படுக்க வைத்து, நாடித் துடிப்பை பரிசோதித்தார் ஞானகுரு. பயப்படும் அளவுக்கு இல்லை, சுந்தரத்திற்கு உடலில் வேறு எங்கும் காயம் இல்லை.
எனவே, சுந்தரத்தின் உடம்பை அழுத்தமாக நீவினார். மோதிய லாரியின் டிரைவர் ஓடி வந்து பார்த்தான். அவனுடைய கைலியை சட்டென்று கழட்டி, ஞானகுருவுக்கு வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை துடைத்துவிட்டான். மேலும், ஒரு தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான்.
லேசாக தண்ணீர் தெளித்ததும், திகில் நிறைந்த முகத்துடன் கண் திறந்தார் சுந்தரம்.
’’மீண்டும் பிறந்து விட்டீர்கள்… வெல்கம்…’’ என்று சிரித்தார் ஞானகுரு. சிரிக்கும்போது முகத்தில் ஆங்காங்கே வலி தெறித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
உயிர் பிழைத்ததையே நம்பமுடியாமல் தடுமாறி எழுந்த சுந்தரம், எந்த காயமும் இல்லாத காரணத்தால் சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டார். யாரோ ஒருவர் வீட்டில் இருந்து மருந்து எடுத்துவந்து, தடவி, நெற்றியில் வழிந்த ரத்தத்தை நிறுத்த கட்டு போட்டார். அனைவருக்கும் நன்றி சொல்லி எழுந்ததும் சுந்தரத்திடம், ‘‘காரை எடுங்கள்…’’ என்றார் ஞானகுரு.
காரில் வந்த இருவருக்கும் பெரிய அடி எதுவும் இல்லை என்றதும் சுற்றியிருந்த கூட்டம் சுவாரஸ்யமின்றி முழுமையாகக் கலைந்தது.
காரின் முன்புறம் லேசாக அடிபட்டிருந்ததை கவனித்த சுந்தரம், ‘‘ராகு காலத்துல கிளம்புனா இப்படித்தான்…’’ என்று முனகியபடி பரிசோதித்தார். சுருட்டு குடித்துக் கொண்டிருந்த ஞானகுருவுக்கு ‘சுருக்’கென கோபம் வந்தது. அவருடைய பாணியில் பேசத் தொடங்கினார்.
’’மனதை முழுமையாக டிரைவிங்கில் செலுத்தாமல், காலத்தின் மீது பழியைப் போடுகிறாய்… இன்று உங்கள் முதலாளியும், நீயும் இந்த காருக்குள் உயிர் விடவேண்டும் என்பதுதான் விதி. அதனை என் ரத்தம் கொடுத்து தடுத்திருக்கிறேன். விபத்துக்காக கலங்குவதை விட்டு, உயிர் பிழைத்ததற்காக சந்தோஷப்படு…’’ என்றேன்.
எதிர்பார்த்தபடியே ஞானகுருவின் பதில் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. திகில் நிறைந்த முகத்துடன் பேசினார்.
’’ஆமா சாமி, இந்த சனிப்பெயர்ச்சியில எங்க முதலாளி உயிருக்கு ஆபத்துன்னு சொல்லியிருந்தாங்க. அதைத்தான் நீங்க தடுத்திருக்கீங்க. உங்களைப் பத்தித் தெரியாம தப்பாப் பேசிட்டேன். மன்னிச்சிருங்க சாமி…’’ என்று அளவுக்கு மீறி பணிந்தார். எல்லா பணக்காரர்களுக்கும் ஏதேனும் கண்டம் இருப்பதாக கதை விட்டால்தானே ஜோசியர்களுக்கு பிழைப்பு ஓடும். ஞானகுரு குருட்டாம்போக்கில் சொன்னதை நிஜமாகவே நம்பினார் சுந்தரம்.
புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ‘’ஜோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவைகளில் நம்பிக்கை வைக்காதே… ஏனென்றால், உன்னுடைய தலையெழுத்து அல்லது முன் ஜென்மத்தில் நீ செய்த வினைகளே உன் வாழ்க்கையில் நன்மை, தீமை தருவதாக ஜோதிடன் சொல்வான். ஆனால், அவனே, ‘ஒருவர் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது’ என்றும் சொல்வான்.
தலையெழுத்தை மாற்றவே முடியாது என்று சொல்பவனே, சில பரிகாரங்கள் செய்தால் தீமைகளைக் குறைக்க முடியும் என்றும் சொல்வான். சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்ற கிரகங்கள் உன் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்குவதாகச் சொல்வான். ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமிக்கு மிக நெருக்கமாக சந்திரன் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை பூமியில் சில பாதிப்புகளை உண்டாக்கும் என்று சொல்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அவைகளின் ஈர்ப்பு விசை பூமியை எட்டவே எட்டாது.
பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான் எனும்போது, மற்ற கிரகங்களின் ஈர்ப்பினால் பூமிக்கே எந்த பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில், அதில் வாழும் மனிதனுக்கு மட்டும் எப்படி பாதிப்பு ஏற்படும்?
ஒரு நாளைக்கு 16 முகூர்த்தம் என்று பிரித்து, அவற்றில் ராகு காலம் மற்றும் எம கண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்கள் செய்ய கூடாது என்கிறான். ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் வெளியே தூக்கிப் போட்டுவிடுவாயா..? எம கண்டத்தில் பணம் கொடுத்தால் வாங்க மாட்டாயா..? ராகு காலத்தில் விமானம், ரயில், பஸ் கிளம்புகிறதே இவற்றுக்கெல்லாம் என்ன நேர்கிறது..? காலம், நேரம் என்பதே ஒரு மாயக் கணிதம். எனவே, தேவை இல்லாத சிக்கலில் நீயே போய் மாட்டிக் கொள்ளாதே…’’ என்று முடித்தார் ஞானகுரு.