• Home
  • யாக்கை
  • காய்ச்சாமல் பால் குடித்தால் என்னாகும்?

காய்ச்சாமல் பால் குடித்தால் என்னாகும்?

Image

எலும்புக்கு மருந்து



நமது ஆரோக்கிய வாழ்வுக்கு பாலைவிட சிறந்த சத்தான உணவுப் பொருள் வேறு எதுவுமில்லை. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்குத் தேவையான ஒரு முழு உணவாகப் பார்க்கப்படுகிறது. உடல் எடையைப் பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் கிடைக்கிறது. உலகளாவிய பிரதான உணவான பாலில், தண்ணீர், புரதங்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் லாக்டோஸ் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. பற்கள் மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற  பல பயன்களும் உள்ளன.
கனடா பிராக் பல்கலைக்கழகத்தின், இணைப் பேராசிரியரான ராய் என்பவர், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் எடையைக் குறைப்பதற்கு பயன்படுவதாக ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார். இதைப்போன்றே இன்னொரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் எல்விஸ் என்பவர், பால் பருகுவதால், பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய், இதயநோய் போன்ற பிரச்னையால், இறப்பவர்களின் எண்ணிக்கை 15 முதல் 20 சதவிகிதம் குறைந்திருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

அதேநேரம், பாலை அதிகம் பருகுவதால், எலும்பு முறிவு, இதய நோய், நீரிழிவு, அல்சைமர், புற்றுநோய் ஏற்படுவதாகவும்  தெரிய வந்துள்ளன. ஆனால், பாலாக பருகாமல், புளித்த தயிர், வெண்ணெய் போன்ற பாலின் பொருட்களாக எடுத்துக்கொண்டால், அதனால் வரும் அபாயங்கள் 10 முதல் 20 சதவிகிதம் வரை குறைவதாகவும் கூறியுள்ளன.
தற்போதைய காலகட்டத்தில், கொழுப்புச் சத்து நிறைந்த பால், கொழுப்புச் சத்து நீக்கிய பால், கொழுப்புச் சத்து குறைந்த அளவுடைய பால் எனப் பல வகைகளில் விற்பனை மாறியுள்ளது. இதையடுத்து, உலக சுகாதார மையம்,  ‘ஒருநாளைக்கு 300 – 750 மில்லி லிட்டர் பால் பருகுவது ஆரோக்கியமான வாழ்விற்குச் சிறந்தது’ என கூறுகிறது. குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சியில், மிக முக்கிய  உணவுப் பொருள் பால். எனவே, பாலின் தனித்துவத்தை உணர்ந்து, பதப்படுத்தப்பட்ட பாலாக இருந்தாலும், நன்கு காய்ச்சி, நம் உடலின் ஜீரண சக்திக்கு ஏற்ற அளவு எடுத்துக்கொள்ளலாம்.  


பசும்பால் 90 சதவிகித நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் உள்ளது. இதில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரெட்  சத்துகள் உள்ளன. பசும்பாலைவிட, எருமைப் பாலில் 100 சதவிகிதம் கொழுப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் எருமைப் பாலில் கால்சியம், பாஸ்போரோஸ், மெக்னீசியம், புரதம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் அதிகம் காணப்படுகின்றன.  எருமைப் பால் உடலின் உள்ள உறுப்புகளை சுத்தமாகவும் மற்றும் சத்தாகவும் வைத்துக்கொள்வதுடன் உடலின் வெளிபாகங்களுக்கும் சிறந்ததாக இருக்கிறது. பசும்பாலில், எருமை பாலைவிட கொழுப்புத் தன்மை குறைவு. பசும்பால் எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதனால் இதனை பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
எருமைப் பாலை நீண்டநாள் வரை வைத்து பயன்படுத்தலாம். ஆனால், பசும்பாலை 1 அல்லது 2 நாள்வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். இரண்டுமே சிறந்ததுதான் என்றாலும், தங்கள் உடல்  தன்மைக்கேற்ப, தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி எடுத்துக்கொள்வதே நலம்.

நமது முன்னோர்கள் பெரும்பாலும் பாலை கொதிக்க வைக்காமல் பச்சையாகத்தான் குடித்தார்கள். அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. பாலும் இப்போது பதப்படுத்தல் முறைக்கு ஆளாகிவிட்டது. இதனால், நாம் பல சத்துகளை இழக்கிறோம் என்பதே உண்மை. பாலைப் பதப்படுத்தும் முறை 1900களில் தொடங்கப்பட்டது. இந்த முறையின் மூலம் அதிக நாட்கள் கெடாமலும், பல ஆரோக்கிய பிரச்னைகளைச் சரிசெய்யவும் உறுதி செய்யப்பட்டது.

இன்று, பாலை நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும்,  அவை கெடாமல் இருப்பதற்காகவும் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை குடலுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. கறந்த பாலை 4 மணி நேரத்துக்குள் காய்ச்சிவிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் பாலின் இயல்பை பாதுகாக்கும்போது அதில் காரத்தன்மை உள்ள நியூட்ரலைசர்களைப் பயன்படுத்துகிறார்கள்.

 இந்தியாவை பொறுத்தவரை, 68 சதவிகிதம் அளவுக்கு பாலில் கலப்படம் செய்யப்படுவதாக விசாரணை ஒன்றில் தெரியவந்திருக்கிறது. அத்துடன், தமிழகம், கேரளா, டெல்லி மாநிலங்களில் பயன்படுத்தப்படும் பாலில் அப் லாடாக்சி எம் 1 என்னும் ரசாயனம் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டது. பாலில் யூரியா, காஸ்டிக் சோடா போன்ற பொருள்களும் கலப்படம் செய்வதாக பகீர் குற்றச்சாட்டுகளும் உண்டு. நீண்டநாள்கள் பாலின் ருசி குறையாமல் இருக்க இதைப் பயன்படுத்துவதாகவும் ஒரு தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதனால் இயல்பாக இருக்கக்கூடிய சத்துகள் குறைந்துவிடுவதோடு நஞ்சு கலந்ததாக பால் மாறிவிடுகிறது.


எது எப்படியோ, புல்லை உண்ணும் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் சுத்தமான பச்சைப் பால் ஆரோக்கியமான அமினோ அமிலங்களையும் என்சைம்களையும் கொண்டுள்ளது என்பது மட்டும் உண்மை. இது, பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இருக்கும் ஆண்டிபயாடிக் பண்புகள் பாலை, பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது. கால்சியம் அதிகம் இருக்கும் பொருட்களில் பால் மிகவும் முக்கியமானதாகும். பச்சைப் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவு பதப்படுத்தப்பட்ட பாலில் இருப்பதைவிட அதிகமாகும்.  நமது எலும்புகளும், பற்களும் பலமாக இருக்க கால்சியம் மிகவும் முக்கியமானதாகும்.


மேலும் பதப்படுத்தப்பட்ட பாலைவிட, பச்சைப் பாலை நமது உடல் எளிதில் ஏற்றுக்கொள்ளும். உண்மையில் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பச்சைப் பால் நல்ல தீர்வு. அது எடை அதிகரிப்பதையும், உடல் பருமனையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். சிலருக்கு காய்ச்சாத பால் குடித்தவுடன்  உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். அவர்கள்  பச்சைப் பாலைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பச்சைப்பாலை குடிப்பதற்கு முன் மருத்துவர்களிடம் ஆலோசிப்பது நல்லது.


குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே பால் கொடுத்து பழகுவதால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் நிறைந்து வளருவார்கள். 1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம். 4 வயது முதல் 10 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு காலை, மாலை அல்லது இரவு நேரம் என இரண்டு டம்ளர் வரை கொடுக்கலாம். உட லுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து கொடுக்கலாம். சளி, இருமல் வரும்போதும் மழைக்காலத்திலும் மஞ்சள் தூளோடு பூண்டு தட்டி சேர்த்து கொதிக்கவைத்தும் கொடுக்கலாம்.

அதிகப்படியான வறட்டு இருமலாக இருந்தால் மஞ்சள்தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். பதின்ம வயதினர் தினமும் இரண்டு டம்ளர் பால், பால் பொருள்களான தயிர், மோர், நெய் போன்றவற்றைச் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். இவர்களைவிட அதிகமாக 21 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வயதானவர்கள் எலும்புகளைப் பாதுகாக்க தினமும் ஒரு டம்ளர் அளவு மட்டுமே பால் எடுத்துக்கொள்ளலாம். மாதவிடாய் நின்ற பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலை கட்டாயமாக குடிக்க வேண்டும்.

லேக்டோமீட்டர் கருவியை பாலில் வைத்து, அது 1026 எண்ணுக்கு கீழே காட்டினால் அந்தப் பால் கலப்படம் என அறியலாம்.  சுத்தமான தரையில் ஒரு டீஸ்பூன் பாலை விட்டால் அந்த பால் அப்படியே இருக்கும். பாலில் கலப்படம் இருந்தால் பால் மட்டும் ஓடி மாவு தரையில் தங்கும். காய்ச்சிய பாலை கண்ணாடி குடுவையில் ஊற்றி நன்றாகக் குலுக்கினால், சோப்புத்தூள் கலந்த பாலாக இருந்தால் பொங்கிய நுரை நீண்ட நேரம் இருக்கும். கண்ணாடி குடுவை அல்ல கைகளில் சிறிது ஊற்றி நுரைக்க தேய்த்தாலும்,  நுரை பொங்கி வர செய்யும். பால் நுரையாக இருந்தால் போகாது.
சுத்தமான பாலை காய்ச்சும்போது எலுமிச்சைச் சாறு சேர்த்தால்  அவை திரிந்துவிடும். கலப்பட பாலாக இருந்தால் திரியாது.  ஒரு கிண்ணத்தில் சிறிது பாலைவிட்டு உப்பு தூவியதும், அவற்றில் நீலநிற வட்டங்கள் உருவானால் அது,  கலப்படம் நிறைந்த பால்.

ஒருசிலருக்கு பால் அலர்ஜியாகலாம் என்பதால், அவர்கள் பாலை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

Leave a Comment