மருத்துவ ஆலோசனை
குழந்தைகளின் முதல் உணவும் முக்கியமான உணவும் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் மூலமே குழந்தைக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. அதனால்தான் குறைந்தது ஆறு மாதமாவது குழந்தை தாய்ப்பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தாய்ப்பாலுக்கு வலிமையாக இருப்பது, தாய் உண்ணும் உணவே ஆகும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்துக்கு வழிவகுப்பதால், பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்குக் கொடுக்கும் உணவுமுறையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது. தாய்மார்கள் எடுக்க வேண்டியது, தவிர்க்க வேண்டியது பற்றி இங்கு காண்போம்….
பேரீச்சை, அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். முள்ளங்கி, சுரைக்காய் போன்ற நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகள் பால் சுரப்பை அதிகரிக்கும். கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம்.
மெர்க்குரி அதிகம் உள்ள சில மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம். பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேகவைத்துச் சாப்பிடலாம். வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் பால் சுரப்பும் அதிகமாகும். நெய்யில் பூண்டைதோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதைச் சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும்.
கேழ்வரகால் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதுவும் தாய்ப்பால் நன்கு சுரப்பதற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும்.
இவற்றை தவிர்த்து குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள், ஒவ்வொருமுறை பால் கொடுக்கும் முன்பும் சுத்தமான நீர் ஆகாரங்களை அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் பால் கட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவும் மருந்தும் என்பதை மறந்துவிட கூடாது. தவிர, அதிக காரமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்னை ஏற்படும்.
அடுத்து, பிராய்லர் கோழி மற்றும் துரித உணவுகள் சாப்பிடுவதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். அதிக அளவு காபி குடித்தால் அதிலுள்ள ‘கெஃபைன்’ என்னும் வேதிப்பொருள் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைளுக்கு மந்ததன்மையை ஏற்படுத்துவதோடு, தாயின் உடல் எடையையும் கூட்டி விடும்.
மேலும், பசும்பால் பொருள்களில் உள்ள பால் புரதம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உண்பதை தாய்மார்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். கார்போனைட்டட் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
ருசியைவிட குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் என்பதை ஒவ்வொரு தாயும் கவனத்தில் கொள்ளவேண்டும்.