• Home
  • சட்டம்
  • நத்தம், கிராமநத்தம் என்ன அர்த்தம்.?

நத்தம், கிராமநத்தம் என்ன அர்த்தம்.?

Image

சட்டம் தெரிஞ்சுக்குவோம்.

பொதுவாக பேச்சுவழக்கில் நத்தம், கிராமநத்தம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருப்போம். இந்த நிலங்கள் குறித்து தெளிவான விளக்கம் தருகிறார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.நிலா.

வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீகக் குடியிருப்புகளையும், அதனை சுற்றி எதிர்காலத்தில் குடியிருப்பு தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு காலியாக உள்ள இடங்களையும் சேர்ந்தது “நத்தம்” என்று வகைப்படுத்தி வைத்தனர். அதன்படி நத்தம் என்றால் குடியிருப்புக்கான நிலம் ஆகும்.

நத்தத்தை பொதுவாக கிராம நத்தம் என்று சொல்வார்கள். ஊர் தெருவில் இருப்பது ஊர் நத்தம் என்றும் சேரியில் இருப்பதை சேரி நத்தம் என்றும் சொல்வார்கள்.  கிராமத்தில் உள்ள நத்தம் இடம் அனைத்தையும் ஒரே புலபடமாக வரைந்து அதற்கு ஒரு சர்வே எண்ணை கொடுத்தோ அதிக பரப்பு இருந்தால் 2,3 சர்வே எண்களை கொடுத்து வகைப்படுத்தி இருப்பார்கள். பெரும்பாலும் 1 ஹெக்டேர் இல் இருந்து 10 ஹெக்டர் பரப்புவரை நத்தம் நிலங்களை பிரித்து இருப்பர். இதில் ஆட்கள் யாரும் வசிக்காத நிலங்களை “நத்தத்தில் புறம்போக்கு” என்பார்கள்.

நத்தத்தில் புறம்போக்காக இருக்கிற பகுதிகள் அரசினுடையது ஆகையால் ஆரம்ப பள்ளி , சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் ரேசன்கடை, பால் உற்பத்தியாளர் சங்கம் என்று அரசு உயர் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளும்.

நத்தம் நிலத்தில ஆரம்ப காலம் முதல் தொட்டே கிரயம், தானம்,விடுதலை, செட்டில்மென்ட் உட்பட அனைத்து சொத்து பரிமாற்ற பத்திரங்களும் சார்பதிவகத்தில் பதியப்பட்டது. அப்பொழுது நத்தம் நிலத்திற்கு பட்டா இருந்தால் பத்திரம் பதிவார்கள் என்ற நிலை இல்லை. இப்பொழுதும் நத்தம் சர்வே நடக்காத கிராமங்களிலும் பட்டா இல்லாமல் பத்திர பதிவு நடக்கிறது. இந்த பத்திர பதிவுகள் எல்லாம் முழுபுலத்தின் சர்வே எண்ணை் வைத்துதான் நடக்கும். அதற்கு உட்பிரிவு சர்வே எணகள் இருக்காது. நான்கு மால் எல்லை (அ) ஜமாபந்தியில விவரிப்பதன் மூலமாக தான் ஒரு தனிப்பட்ட சொத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பிற சொத்துக்களில் உட்பிரிவு சர்வே எண்ணை வைத்து தெளிவாக அடையாள் கண்டு கொள்ள முடியும்.

கிராம நத்தத்தை பற்றி விவரம் தெரிந்தவர்கள் காலியாக இருக்கும் நத்தம் புறம்போக்கு இடங்களை மடக்கி அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.சி ல ஊர்களில் அதனை வீட்டு மனைகளாக பிரித்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சரிசமமாக பங்கு போட்டு கொண்டனர். ஒரு சில இடங்களில் அரசே காலியாக இருக்கும் இடங்களை பிரித்து நிலமற்றவர்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு வீட்டு மனை ஒப்படையாக வழங்கி உள்ளது.

.சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் 1990 வரை கிராம நத்தம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் தான் நடந்தது. 1990 to 1995 வரை தமிழக கிராமங்களில் உள்ள நத்த நிலத்திற்கு நத்தம் நிலவரித் திட்டம் கொண்டுவரப்பட்டது. நத்தம் நிலவரி திட்டம் என்றால் இருக்கின்ற நத்தம் நிலங்களை துல்லியமாக அளந்து யார் யாரிடம் எவ்வளவு இடம் இருக்கிறது. என வரைப்படம் வரைந்து போது இடங்களை தனியாக வகைப்படுத்தி வழிகளை ஒழுங்குபடுத்தி அளந்து அதனை எல்லாம் ஒரு படமாக வரைந்து ஒவ்வொன்றுக்கும் உட்பிரிவு எண் கொடுப்பார்கள்.

1990 க்கு பிறகு தான், கிராம நத்த நிலத்திற்கு நத்தம் FMB நத்தம் தூய அடங்கல்,நத்தம் தோராய பட்டா, நத்தம் தூய பட்டா போன்ற ஆவணங்கள் உருவாகின. இதனால் தான் யார் யார் எந்த ஏந்த நிலத்தை வைத்து இருக்கிறார்கள் என துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டது. அதற்கென தனி சர்வே எண் உட்பிரிவுகளும் வந்ததால் புதிதாக பதியப்படும் கிரைய பத்திரங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகளிலும் சர்வே எண்ணும் அதன் உட்பிரிவு எண்களும்ஆவணப்படுத்தபட்டன.

கிராம நத்தம் நிலம் இன்றுவரை கணினி மயமாக்கப்படவில்லை. அதனால் இன்னும் ஆன்லைன் ஆகவில்லை. இன்றைய தலைமுறையினர் கிராம நத்த பட்டாவை ஆன்லைனில் தேடுகின்றனர். இவையெல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்காது என்பதே உண்மை.

சர்வே இதுவரை நடக்காத கிராமங்களில் மற்றும் சர்வே நடந்த கிராமங்களின் கிராம கணக்கில் குறிப்புகளாக கூட ஒப்படை பற்றிய விவரங்கள் இருக்காது. அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று 10,20 ஆண்டுகளுக்கு பிறகு யாராவது வழக்கு தொடுத்தால் ஒப்படை நிலம்தான் என்று நிரூபிக்க அரசிடம் இது சம்பந்தப்பட்ட கோப்புகள் தேடி எடுக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

நத்தம் இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் முதலில் அங்கு நத்தம் நிலவரிதிட்ட சர்வே நடந்ததா? என்று பார்க்க வேண்டும்.அப்படி நடந்தால் தோராய பட்டாவில் உள்ளதா தூயபட்டாவில் உள்ளதா என பார்க்க வேண்டும்.நத்தத்தில் அரசு நில ஒப்படை கொடுத்து இருந்தால் அரசிடம் அது சம்மந்தபட்ட கோப்புகள் இருக்கிறதா என்று ஆராயவும்.அதன் பிறகு ஆவண நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியருக்கு மனுவோ நீதிமன்ற வழக்குககளுக்கோ செல்ல வேண்டும்.

  • எம்.நிலா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். தொடர்புக்கு : 7299753999

Leave a Comment