• Home
  • மனம்
  • பொய் பேசுவதால் என்ன கிடைக்கும்..?

பொய் பேசுவதால் என்ன கிடைக்கும்..?

Image

உண்மையின் சக்தி

நீங்கள் சொன்ன ஒரே ஒரு பொய் வெளிச்சத்துக்கு வரும்போது, இதுவரை பேசிய அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது என்பார்கள். பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று பாரதியும், உண்மையின் சிறப்பு குறித்து திருவள்ளுவர் கூறியதையும் படித்திருந்தாலும், மக்கள் பொய்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

மனிதர்கள் எதற்காக பொய் சொல்கிறார்கள்..?

தங்களது தவறுகளை மறைப்பதற்கு பொய் சொல்பவர்களே அதிகம். வயிற்று வலி அதனால் ஹோம் ஒர்க் பண்ணலை என்று சின்னவயதிலேயே பலரும் பொய் பேசத் தொடங்குகிறார்கள். இது பொய் என்று தெரியும் என்றாலும் ஆசிரியர் மன்னித்துவிடுகிறார். உடனே தங்களுக்கு நன்றாக பொய் சொல்லி தப்பிக்கத் தெரியும் என்று எண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறார்கள். அதேபோல், பெருமைக்காக பொய் சொல்பவர்கள் அதிகம். எங்களுக்கு ஊரில் ஒரு மிகப்பெரிய வீடு இருக்கிறது, லாக்கரில் 200 பவுன் நகை இருக்கிறது என்றெல்லாம் அள்ளிவிடுகிறார்கள்.

இதுபோன்ற பொய்களால் என்ன சாதிக்கப்போகிறோம் என்று பார்த்தால் எதுவுமே இல்லை. இன்னொரு வகையில் பொய் சொல்வது மிகவும் கடினமான காரியமும்கூட. ஆம், ஒரு பொய் சொன்னால், அந்த பொய்யை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி பொய்யை ஞாபகம் வைத்திருப்பது சாத்தியமே இல்லை என்பதால், என்றேனும் ஒரு நாள் நிச்சயம் மாட்டிக்கொள்வது உறுதி.

மேலும், ஒரு  பொய்யை மறைக்க அடுக்கடுக்காக நிறைய பொய்கள் சொல்ல வேண்டியது வரும். நான் தாஜ்மஹால் பார்த்துட்டேன் என்று பொய்யாக கெத்துக்காட்டினால், எப்படி போனீங்க, ரயிலா.. ஃப்ளைட்டா, எந்த ஸ்டேஷனில் இறங்குனீங்க, எந்த விடுதியில் தங்குனீங்க என்ற கேள்விகளுக்கும் எக்கச்சக்கமாக பொய் பேச வேண்டியிருக்கும். இத்தனை பொய்களையும் தொடர்ந்து ஞாபகம் வைத்திருப்பது நடக்கிற காரியமா என்ன..?

இதையெல்லாம்விட ஒரு உண்மை இருக்கிறது. அதாவது, உண்மை எப்படியாவது ஒரு நாள் வெளியே வந்துவிடும். அப்போது அவமானம் நிச்சயம்தான். அதுசரி, உண்மை பேசுவதால் என்ன கிடைக்கப்போகிறது, நிறைய நிறைய சோதனைகள்தானே என்று கேட்கலாம்.

ஏனென்றால், உண்மை மட்டுமே பேசுவேன் என்று உறுதியுடன் வாழ்ந்த ஹரிச்சந்திர மகாராஜா எக்கச்சக்க துன்பங்களை அனுபவித்தார். அவர் துன்பங்களை அனுபவித்தது உண்மைதான். ஆனால், அவர் பேசிய உண்மைதான், இன்று வரை அவரை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. கடவுளையும் அவர் முன் வரவழைத்தது.

ஹரிச்சந்திரன் கதையை நாடகமாக பார்த்த நம் தேசத் தந்தை காந்தியடிகள்கூட, அன்றுமுதல் பொய் பேசுவதில்லை என முடிவுசெய்து, இறுதிவரை சத்தியசீலராகவே வாழ்ந்து மறைந்தார். இன்றும் அதுபோல் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் முடிந்தவரையிலும் உண்மையே பேசுவோம்.

’பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே, உண்மை சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால், பொய் வாழவிடாது, உண்மை சாகவிடாது’ என்று கூறியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இனி, நாம் என்ன சொல்வதற்கு இருக்கிறது.

Leave a Comment