அக்டோபர் 17 என்ன பேசினார் எம்.ஜி.ஆர்..?

Image

அண்ணா தி.மு.க. உதயம்

1972ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர். அக்டோபர் 10ம் தேதியே நீக்கப்பட்டார். அதையடுத்து எழுந்த மக்கள் எழுச்சியை அடுத்து புதிய கட்சி தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் எம்.ஜி.ஆர்.

இதையடுத்து 1972, அக்டோபர் 17. பேரறிஞர் அண்ணா சமாதிக்குச் சென்று வணங்கிய பிறகு, புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் புரட்சித்தலைவர். அப்போது அவர், ‘’‘’தனியாகவே அண்ணாவின் லட்சியங்களை நிறைவேற்ற நான் தயாராகி விட்டேன். லட்சோப லட்சம் மக்களின் ஆவலை, எதிர்பார்ப்பை நான் அறிவேன். எனவே, என்னை ஆளாக்கிய, அமரர் பேரறிஞர், அண்ணாவின் பெயராலே புதிய இயக்கம் தொடங்க உள்ளேன். கட்சியின் பெயர், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். பேரறிஞர் அண்ணாவின் திரு உருவம் பொறித்த கொடிதான் எங்கள் கட்சிக் கொடி’’ என்று அறிவித்தார்.

’கட்சியில் இருந்து நீக்கினால் எம்.ஜி.ஆர். முழுநேரமாக சினிமாவுக்குப் போய்விடுவார்’ என்று நினைத்திருந்த தி.மு.க. தலைவர்களுக்கு, அண்ணா தி.மு.க.  கட்சி அறிவிப்பு இடி போல் விழுந்தது. எனவே, அ.தி.மு.க.வை ஆரம்ப கட்டத்திலேயே நசுக்கிவிட முடிவுசெய்தனர்.

தமிழகமெங்கும் அண்ணா தி.மு.க.வுக்கு மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, பேரூராட்சி, கிராமப்பஞ்சாயத்து கிளைகளைத் தொடங்கிய எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள், விசுவாசிகள் ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும், கொடூர தாக்குதலுக்கும் ஆளானார்கள். லட்சோபலட்சம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ரசிகர்கள் தாக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களது இல்லங்கள் மீதும் கல்லெறி தாக்குதல்கள் நடந்தன.

இந்த தாக்குதலில், மதுரை கர்ணன் கண்களைப் பறிகொடுத்தார். வத்தலக்குண்டு ஆறுமுகம், ஆண்டிப்பட்டி அமுதன், சிதம்பரம் பாலசுந்தரம், பூலாவரி சுகுமாரன், தூத்துக்குடி சிகாமணி, ஓட்டேரி பாபு போன்ற 20க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்தனர். பாதிக்கப்பட்ட தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர். ஆறுதலும், நிதியுதவியும் செய்துகொண்டே இருந்தார். இந்த வன்முறையே எம்.ஜி.ஆருக்கு மக்களிடம் பெரும் அனுதாபம் உருவாகக் காரணமானது.

எம்.ஜி.ஆரை கருணாநிதி திட்டமிட்டு வெளியேற்றி அவமானப்படுத்தியதாக மக்கள் நினைத்தார்கள். கணக்கு கேட்டது தப்பா என்று நினைத்தார்கள். அந்த எண்ணமே எம்.ஜி.ஆருக்கு வெற்றியாகவும் கருணாநிதிக்குத் தோல்வியாகவும் மாறியது.

Leave a Comment