பணம் என்னவெல்லாம் செய்யும்..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : பணம் பத்தும் செய்யும் என்கிறார்களே, அது என்ன..?

  • கே.ராகவன், சூலக்கரை.

ஞானகுரு ;

காம, குரோத, லோப, மோஹ, மத, மாச்சர்ய, டம்ப, தர்ப்ப, ஈர்ஷை, அசூயை ஆகிய பத்தும் செய்யும் என்பார்கள். அதாவது பேராசை, தீய இச்சை, கஞ்சத்தனம், காதல், அகம்பாவம் எனப்படும் ஈகோ, பொறாமை, ஆடம்பரம், தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற அகங்காரம், கர்வம், கெடுமனம் அதாவது தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும் என்ற கொடிய புத்தி போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடும் என்கிறார்கள். உண்மை என்னவென்றால் பணம் எதுவும் செய்யாது. பணம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனும் செய்யலாம், கொலையும் செய்யலாம். பணத்திற்காக தவறு செய்பவர்களை விட, பணம் இருப்பதால் தவறு செய்பவர்களே அதிகம்.

கேள்வி : புகழ் வெளிச்சம் மனிதனை வளப்படுத்துமா..?

  • என்.நாகேந்திரன், குறிஞ்சி தெரு.

ஞானகுரு ;

குற்றம் செய்த மனிதர்களைத் திருத்துவதற்காகவே சிறைச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், சிறைக்குச் சென்று திருந்தியவர்களை விட கெட்டுப் போனவர்களே அதிகம். அப்படி, புகழை தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்துபவர்கள் குறைவு. மேலும் மேலும் புகழுக்கு ஆசைப்பட்டு ஓடுகிறார்களே தவிர, அந்த வெளிச்சத்தை ரசித்து அனுபவிப்பதில்லை.

கேள்வி : தமிழக குடும்ப அமைப்பை வெளிநாட்டினர் கொண்டாடக் காரணம் என்ன..?

  • என்.பூமிநாதன், காந்திநகர்.

ஞானகுரு ;

வெளிநாட்டினர் நமது குடும்ப அமைப்பை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் என்பது மட்டுமே உண்மையே தவிர, கொண்டாடுவதில்லை. அப்படி கொண்டாடுவது என்றால், அங்கேயும் நமது கலாச்சாரத்தைப் பின்பற்றியிருப்பார்கள். இந்தியர்களே இப்போது வெளிநாட்டு குடும்ப அமைப்பை கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதிலிருந்தே எது உயர்வானது என்பதை அறியலாம்.

Leave a Comment