கண்டறிவதே வெற்றி
கடவுள் கண் முன்னே காட்சியளித்து, ‘மகனே நீ விரும்பும் வரம் தருகிறேன்… பெற்றுக்கொள்’ என்று ஆசைப்பட்டதை எல்லாம் அள்ளிக்கொடுக்க வேண்டும் என்பதுதான், பெரும்பாலான மனிதர்களின் விருப்பம்.

தவம் செய்தால் வரம் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை என்றாலும், யாரும் அப்படியெல்லாம் முயற்சி செய்வதில்லை. ஏனென்றால் அதெல்லாம் மிகவும் கடினம். அதுதவிர, வரம் வாங்கிய எவரும் இன்றுவரை உருப்படியாக அதனை பயன்படுத்தியதாக கதைகளும் இல்லை.
அப்படியென்றால் வரம் என்பது ஹம்பக்தானா?
இல்லவே இல்லை. ஒவ்வொரு மனிதரிடமும் தனித்தன்மையான ஒரு வரம் ஒளிந்திருக்கிறது. அதனை கண்டுபிடிப்பவர், மகிழ்ச்சியை எளிதில் அடைந்து விடுகிறார்.
எல்லோரிடமும் ஒரு தனித்தன்மை ஒளிந்திருக்கிறது என்றால், அதனை ஏன் அனைவரும் கண்டுபிடிப்பதில்லை?
ஏனென்றால், எல்லோரும் தேடுவது இல்லை. நான் யார், நான் இங்கே என்ன செய்கிறேன், மற்றவர்களைவிட என்னிடம் என்ன தனித்தன்மை இருக்கிறது என்று உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் தேட வேண்டும். அவ்வளவுதான்.
அந்த தனித்தன்மை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏதோ ஓர் அரிய தன்மையாகத்தான் இருக்கும் என்பதில்லை, மிகமிக சாதாரண ஒன்றாகவும் இருக்கலாம்.
குழம்பு அடுப்பில மணக்கும்போதே, அதன் நிறை, குறைகளை சொல்லும் சுவையறிவாக இருக்கலாம். சிரிப்பாக இருக்கலாம். உழைப்பாக இருக்கலாம். தைரியமாக இருக்கலாம், பொறுமையாக இருக்கலாம். எழுத்தாக இருக்கலாம். கலை ரசனையாக இருக்கலாம். இசையாக இருக்கலாம். அறமாக இருக்கலாம். ஏன், பயமாகவும், கோபமாகவும், உடல் பலமாகவும் இருக்கலாம்.
எது உங்கள் தனித்தன்மை என்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். அது உங்களுக்கு சந்தோஷமும் நம்பிக்கையும் தருகிறதா என்று பாருங்கள். ஆம் என்றால், அதுவே உங்கள் தனித்தன்மை. அதனை உங்களுடைய வரமாக மதித்து, பிறருக்கும் புரியவைக்க வேண்டியதுதான் நீங்கள் செய்யவேண்டிய பணி.
உங்களுடைய வரத்தை வாழ்க்கை முழுவதும் மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொண்டே இருங்கள், அதுதான் மகிழ்ச்சி தரும் மந்திரம்.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
தொடர்புக்கு 9840903586