• Home
  • மனம்
  • இவ்வுலகில் எதற்காக இருக்கிறோம்?

இவ்வுலகில் எதற்காக இருக்கிறோம்?

Image

ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம்

நீங்கள் இவ்வுலகில் உங்கள் முழு மனதுடன் நிறைவாக, மகிழ்ச்சியாக, லட்சியம், பேராசை மற்றும் பயங்களில் இருந்து விடுபட்டு முழுமையாக வாழ்வதற்கு இருக்கிறீர்கள்.

நீங்கள் லட்சியம் அல்லது பேராசை கொண்டவராக இருந்தால், நீங்கள் முழுமையாக வாழமுடியாது.  ஏனெனில், பேராசையும், லட்சியமும் உங்கள் சக்தியை விரயமாக்குகின்றன. முழுமையாக வாழ்வதென்பது பயமில்லாமல், துயரமில்லாமல், கடவுள்களிடம் ஒன்றையும் கேட்காமல் வாழ்வதாகும்.  ஏனெனில் நீங்களே உங்களுக்கான ஒளி ஆவீர்கள்.

நீங்கள் முழுமையாக வாழும்போது – உங்களுக்கு நீங்களே ஒளியாக இருக்கும்போது – நீங்கள் யாரையும் பின்பற்ற மாட்டீர்கள், உங்களுக்கு தேச அடையாளம் இருக்காது, நீங்கள் எந்தவித மதம் மற்றும் அரசியல் அமைப்புடனும் சேரமாட்டீர்கள். நீங்கள் ஒரு சுதந்திரமான மனிதராக இருக்கும்போது, ஆகையால், இவ்வுலகில் உங்களுக்கு, குறைவான அல்லது நிறைந்த செல்வம் உடையவராக இருந்தாலும், செழுமையாக வாழ்வது சாத்தியமாகிறது. அந்தமாதிரியாக வாழும் செயல் மூலமாக நீங்கள் இவ்வுலகை அழகுபடுத்துகிறீர்கள்.

எல்லா இடங்களிலும் நடந்துகொண்டு இருக்கும் பயங்கரங்களைக் கவனியுங்கள்!  இது ஏனென்றால், உங்களுக்கு எப்படி வாழ்வதென்றுத் தெரியவில்லை என்பதால் நீங்கள் செயற்கையாக வாழ்விற்கு ஒரு முக்கியத்துவத்தைத் தருகிறீர்கள். நீங்கள் பத்து வெவ்வேறு மனிதர்களிடம் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று கேட்டால், அவர்கள் பத்துவிதமான வெவ்வேறு பதிலைத் தருவார்கள். அதன் பிறகு உங்களால் என்ன செய்ய முடியும், நீங்களும் அந்த பத்து பதில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன்படி வாழ முயற்சிக்கிறீர்கள், இல்லையா?

முழுமையாக வாழ்வதென்றால் என்ன என்று நீங்களாகவே சுயமாக கண்டறியவேண்டும்.நீங்கள் மரணம் குறித்து, மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று அல்லது தவறு செய்துவிடுவோமோ என்று பயம்கொண்டு இருந்தால், உங்களால் நிறைவாக வாழ இயலாது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

நீங்கள் லட்சியம் கொண்டு இருந்தால், அதிகாரத்தைத் தேடிக்கொண்டு அல்லது பதவியைப் பிடித்துக்கொண்டு, எப்படி பெரும்பாலான மக்கள் இதில் ஏதோ ஒருவிதத்தில் வாழ்கிறார்களோ அப்படி வாழ்ந்தால், உங்களால் நிறைவாக வாழமுடியாது.  ஏனெனில், நீங்கள் எப்போதுமே மற்றவர்களுடனும், உங்களுக்குள்ளும் முரண்பாடுகளுடனேயே இருப்பீர்கள்.

சீர்கெட்ட இவ்வுலகில், பல்வேறு நிரந்தர ஆசைகள் நிறைந்த, பயமுறுத்தும் மற்றும் பரிசுகளைத்தரும் ஏராளமான கடவுள்களைக் கொண்டிருக்கும் இவ்வுலகில் பேராவல் இன்றி வாழ்வது மிகவும் கடினமாகும். இந்த மாதிரி உலகில் வாழ அதிசயத்தக்க வகையில் நூண்ணறிவு கொண்டு இருப்பது அவசியம். எல்லாவற்றையும் கவனிப்பதன் மூலமாக, எல்லாவற்றையும் கேட்பதன் மூலமாக மட்டுமே நீங்கள் நுண்ணறிவைப் பெறமுடியும். அப்போது உங்கள் கண்கள் உயிர்புடன் இருக்கின்றன, செவிகள் கூர்மையாகின்றன.

கவனித்தல் மற்றும் கேட்டல் மூலமாக தன்னை அறிதல் நடக்கிறது, மேலும், உங்களை அறிவதன் மூலமாக வியக்கத்தக்க வகையில் உங்களுக்கு தொலையறிவு ( Vision) கிடைக்கிறது. இவ்வுலகில் இருப்பதற்கு இதைவிட வேறு எந்த சிறப்பான காரணம் உங்களுக்கு வேண்டும்?

Leave a Comment