சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள்
கேள்வி : கீழ் கோர்ட், மேல் கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று பல வகையிலான கோர்ட் இருப்பது தேவையா… ஏன்?
- டி.கந்தசாமி, சாட்சியாபுரம்.
வழக்கறிஞர் நிலா :
கண்டிப்பாக தேவை. ஒரு நீதிமன்றத்தில் ஒருவருக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவர் கருதினால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அங்கு அவர் தனக்குரிய நியாயத்தைக் கேட்பதற்கு வழி செய்து கொடுப்பதே இந்த மேல்முறையீட்டு நீதிமன்றங்கள்.
கேள்வி : சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்றால் என்ன?
- ஏ.தனேந்திரன், சூலக்கரை ரோடு.

வழக்கறிஞர் நிலா :
நியாயம் மற்றும் பண இழப்பீடு கேட்பதற்கு சிவில் சட்டமும் தண்டனை வழங்குவதற்கு கிரிமினல் சட்டமும் வழிவகை செய்கிறது. சொத்து வழக்கு, பண மோசடி, வியாபார முறைகேடு, ஒப்பந்த குளறுபடி போன்றவை சிவில் சட்டத்தில் வருகின்றன. அடிதடி, மோதல், கொள்ளை, கொலை, பொதுமக்களுக்கு எதிரான செயல் போன்றவை எல்லாம் கிரிமினல் சட்டத்தில் இடம் பெறுகிறது.
சிவில் வழக்கு என்றால் ஒருவர் நேரடியாக நீதிமன்றத்தை அணுக முடியும். கிரிமினல் வழக்கு என்றால் காவல் நிலையத்தில் முறையீடு செய்தபிறகே அணுக முடியும். ஒருசில விஷயங்களை சிவில் வழக்காகவும் கிரிமினல் வழக்காகவும் பதிவு செய முடியும்.
கேள்வி : எந்த வகையான வழக்குகளுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம்?
- எஸ்.ரவிச்சந்திரன், பாண்டியன் நகர்.
வழக்கறிஞர் நிலா :
சொந்தத் தேவைக்கு பணம் கொடுத்து வாங்கிய பொருள் அல்லது சேவையில் குறை இருப்பது தெரியவந்தால் முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகி நிவர்த்தி செய்வதற்கு கோரிக்கை வைக்க வேண்டும். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சென்னை & மதுரை
செல்போன் : 7299753999