வாட்டர் புரூப் மேக்கப்

Image

மழையும் அழகு… பெண்ணும் அழகு..!

மழையைப் பார்ப்பதும், ரசிப்பதும் எல்லோருக்கும் பிடித்தமானது. அதேநேரம் மழை நேரத்தில் வெளியே செல்வது என்றால் பெண்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். குடையில் போனாலும் சாரலடித்து உடையும், உடலும் நனைந்துவிடும். அதனால், இருமல், சளித் தொல்லையால் அவதிப்பட நேரிடும். மேலும், சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் காலில் படும்போது சேற்றுப் புண் வர வாய்ப்புள்ளது.

எத்தனை அழகான மேக்கப் போட்டுப் போனாலும் மழை நீரில் கரைந்து ஓடிவிடும். இயற்கையும் இல்லாமல் செயற்கை அழகும் இல்லாமல் அவஸ்தைப்பட நேரிடும். அதனால்தான், பெண்களுக்கு மழையை ரசிக்கத்தான் பிடிக்குமே தவிர, நனைவதற்கு அல்ல.

ஆனால், அப்படியெல்லாம் சங்கடப்பட வேண்டியதில்லை. கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டால், மழை காலத்திலும் அழகுடன் ஜொலிக்க முடியும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

மழை பெய்யும் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ளவும். அதே போல், முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றும் கிரீமைத் தடவி மசாஜ் செய்தால், நல்லது தினமும் இரவு படுக்கப் போகும் முன்பு, ஒரு சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கை விரல்களால் மசாஜ் செய்யுங்கள்.

இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல்
இருக்கும். வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமான
தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.

குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு வைத்திருந்து,
சிறிது நேரம்கழித்துக் குளிக்கலாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமி நாசினியான மஞ்சள் சருமத்தைப் பாதுகாக்கும். ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன் அந்த இடத்தில் தேங்காய்எண்ணை தேய்த்து சிறிது நேரம்கழித்து கழுவி விடலாம்.மழையோ, வெயிலோ எப்படி இருந்தாலும் குறைவாக மேக்கப் போட்டால்தான் அழகாக இருக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் மேக்கப் போட்டிருப்பது அப்பட்டமாக தெரியக்கூடாது. அதேசமயம் மழையில் நனைந்தாலும் மேக்கப் கரைந்து ஓடக்கூடாது. அதற்காகவே வந்துள்ளது வாட்டர் ப்ரூப் மேக்கப். இது மழையில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது.

வாட்டர் ப்ரூப் மேக்கப்போல் மற்றொன்று ஆயில் மேக்கப். தண்ணீர் எண்ணெய் மேல் ஒட்டாது என்பதால், இந்த மேக்கப்பையும் பயன்படுத்தலாம். முதலில் முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன்பிறகு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையம் மற்றும் இதர தழும்பு இருக்கும் பகுதிகளை கன்சீலர் கொண்டு மறைக்க வேண்டும். அடுத்து ஃபவுண்டேஷன். சரும நிறத்திற்கு ஏற்ப ஃபவுண்டேஷன்  போட வேண்டும். இது மேக்கப்பை சருமத்தில் பிடித்துக்கொள்ள உதவும்.

கடைசியாக மைக்ரோசாப்ட் பவுடர். இது மிக நுண்ணிய பவுடர் என்பதால், சருமத்தில் திட்டு திட்டாக இல்லாமல் சமமாக பரவும். அதே போல் ஃபவுண்டேஷன் மற்றும் எந்தவித கிரீமாக இருந்தாலும் சருமத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக பரவி சருமத்தை சீராக காட்டும். வியர்த்தாலோ அல்லது மழையில் நனைந்தாலோ, முகத்தில் படிந்துள்ள தண்ணீரை ஒற்றி எடுக்க வேண்டும். அழுத்தி துடைத்தால் அந்தப் பகுதியில் மட்டும் மேக்கப் கலைந்து போகும் வாய்ப்புள்ளது.

சருமத்துக்கு மேக்கப் போட்டபிறகு, கண்களை அழகு படுத்த வேண்டும். சிலருக்கு பெரிய கண்கள் இருந்தால் அதை வெளிப்படுத்த கண்களுக்கு மேக்கப் போடலாம். முதலில் ஐஷேடோ. பகலில் மேக்கப் போடும் போது பிங்க், பிரவுன், தங்க நிறங்களை பயன்படுத்தலாம். அதுவே இரவு நேரங்களில் கருப்பு, நீலம், பச்சை என அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்தலாம்.  சில சமயம்  இரண்டு நிறங்கள் சேர்ந்து போட்டால் பார்க்க அழகாக இருக்கும். இதில் தங்க நிறம் எல்லா நிற ஐ ஷேடோக்களுக்கும்  செட்டாகும் என்பதால், அதை பயன்படுத்தினால் பார்க்க அழகாக இருக்கும்.

அடுத்து ஐலைனர். உடையின் நிறத்துக்கு ஏற்ப போடலாம். கடைசியாக மஸ்காரா. இது இமை முடிகளை அழகாக எடுத்துக் காட்டும். இவை எல்லாமே வாட்டர் ப்ரூப் என்பதால், தண்ணீர் பட்டாலும் கரையாது. கடைசியாக பிளஷ். இது முகத்தில் கண்ணம், மூக்கு போன்ற பகுதியை அழகாக எடுத்துக் காட்டும். அடுத்து உதட்டு சாயம். பிங்க், பிரவுன் என்றுமே அழகாக இருக்கும். விருப்பப்பட்டால், கிளாஸ் போட்டுக்கொள்ளலாம். இது உதட்டை மேலும் அழகாக எடுத்துக் காட்டும்.

அப்புறமென்ன, எல்லா காலங்களிலும் அழகு ஜொலிக்கட்டும்.

Leave a Comment