கஸ்தூரிபாய் சொன்ன பதில் இதுதான்
இந்திய நாட்டின் தந்தையாக, ஒரு நல்ல தலைவராக மகாத்மா காந்தி இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், அவர் நல்ல கணவரா என்ற கேள்வி பலருக்கும் வரும். ஏனென்றால், ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் ஒரு சர்வாதிகாரி என்றே சொல்லலாம். ஒழுக்க விதிமுறைகளில் பிடிவாதம் காட்டுவார்.
அதாவது கதர் ஆடை, ராட்டையில் நூல் நூற்றல், தானே தனக்கான உணவு தயாரித்தல், கழிவறையை தானே சுத்தம் செய்தல் போன்றவற்றை காந்திஜியே செய்வார். அதேபோல் கஸ்தூரிபாயையும் செய்ய வைப்பார்.
இதை கண்ட ஒரு வெளிநாட்டுப் பெண், “நீங்கள், காந்தியை மணம் புரிந்துகொண்டதால்தான் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியாத அடிமை” என்று கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு கஸ்தூரிபாய் உடனடியாக ஒரு பதில் எழுதினார், இதுதான் அந்தக் கடிதம்.
”என் கணவர், என் வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாக ஆக்கிவிட்டார் என்று நீ எப்படிக் கண்டுபிடித்தாயோ தெரியவில்லை. நான் சோகமாக இருந்ததையும் சோறு இல்லாமல் பட்டினி கிடந்ததையும் நீ இங்குவந்து நேரில் பார்த்தவள்போல் அல்லவா பேசுகிறாய்?
எனக்கு வாய்த்ததுபோல் ஒரு கணவர் உலகத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் கிடைத்திருக்க முடியாது. இன்றுவரை தக்க காரணமின்றி, அவர் என்னைக் கடிந்துகொண்டதே இல்லை. நான் தவறுசெயதபோது அதைச் சுட்டிக்காட்டித் திருத்தியிருக்கிறார். அவ்வளவுதான். அது, ஒரு கணவனின் உரிமைதானே? என்னிடம் என் கணவர் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். மனைவிக்குரிய மதிப்பும், மரியாதையும் கொடுத்து என்னுடன் பழகுகிறார்.
எனக்குக் கிடைத்திருக்கும் புகழுக்கெல்லாம் அவர்தான் காரணம். அப்படியிருக்கையில், நான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை நடத்தவில்லை என்று எப்படி நீ துணிந்துகூறுகிறாய்? ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தற்காலத்துப் பெண்களைப்போல் எனக்கு நடந்துகொள்ளத் தெரியாது. கணவரைக் கிள்ளுக்கீரையா நினைத்து அதிகாரம் செய்து அவரைத் தம் கைக்குள் போட்டுக்கொள்ள நினைக்கும் நாகரிக மனைவிகள், கணவர் தங்கள் வழிக்கு வராவிட்டால், தங்கள் இஷ்டப்படி வாழ்க்கை நடத்துவதற்குத் துணிந்துவிடுகிறார்கள். அப்படிச் செய்வது இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கு அழகல்ல” என்று ஆணித்தரமாக தன்னுடைய கருத்தையும் கணவரின் பெருமையையும், தங்கள் வாழ்க்கையின் உண்மையையும் அதில் உணர்த்தியிருந்தார்.
ஆம். அவர்கள் நினைத்திருந்தால் அரச வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். சேவகம் செய்வதற்கு எத்தனையோ பேரை பயன்படுத்தியிருக்க முடியும். கோடிகோடியாக பணத்தையும் சொத்துக்களையும் சேர்த்திருக்க முடியும்.
ஆனால், அவர்களுடைய சிந்தனை முழுக்க முழுக்க இந்திய சுதந்திரம் பற்றியும், ஏழைகளின் வறுமை பற்றியும்தான் இருந்தது. எளிமையாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று பிறருக்கு புரியவைக்கவே அத்தகைய வாழ்க்கை வாழ்ந்தனர். ஆடம்பரமும் அகங்காரமும் அவர்கள் வாழ்க்கையில் இல்லவே இல்லை.
காந்தியடிகள் அளவுக்கு நம்மால் எளிமையாக வாழமுடிகிறதோ இல்லையோ, நம்முடைய துணை மீது அன்பாவது செலுத்துவோம். அதுதான் நம் தேசப்பிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.