• Home
  • சக்சஸ்
  • பொறியில் விழுந்த எலியால் ஏன் தப்ப முடிவதில்லை?

பொறியில் விழுந்த எலியால் ஏன் தப்ப முடிவதில்லை?

Image

பதட்டம் வெற்றியைத் தடுத்துவிடும்

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில்தான் டிராக்கில் நிற்கிறார்கள். ஆனால், யாரேனும் ஒருவருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. அது யாருக்குத் தெரியுமா..? வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் விளையாட்டை அனுபவித்து இலக்கு நோக்கி ஓடுபவனுக்குத்தான். இதனை தோல்வி அடைந்தவனிடம் கேட்டுப் பார், உண்மை புரியும்.

தன்னை சந்திக்க வந்த, ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியிடம், ‘என்ன பிரச்னை?’ என்று கேட்டார் ஞானகுரு.

’’இன்று எளிதாக முடியவேண்டிய ஒரு டீல், திடீரென கைவிட்டுப் போனது. காரணம் புரியவில்லை..”

‘’இந்த டீல் முடித்தே தீரவேண்டும் என்று நினைத்தாயா..?’’

‘’ஆம், அதற்காக இரவு பகலாக உழைத்து சிறப்பாகவே புராஜெக்ட் தயார் செய்து வைத்திருந்தேன். இந்த டீல் முடிந்திருந்தால் எங்கள் கம்பெனிக்கு மிகப்பெரிய லாபமாக இருந்திருக்கும்…’’

‘’வெற்றி பெறவேண்டும் என்ற பரபரப்புடனும் பதட்டத்துடனும் இருப்பவன் ஒருபோதும் வெற்றி அடைய மாட்டான்… பொறியில் சிக்கிய எலியால் ஏன் தப்பிக்க முடிவதில்லை தெரியுமா?’’

‘’அதான் சிக்கிவிட்டதே..’’

‘’இல்லை, இனி தப்பிக்க முடியாது என்று பதட்டமாகிறது. எலியால் சிமெண்ட் தரையையும், மரப் பொறியையும் எளிதாக பற்களால் குடைந்துவிட முடியும். ஆனால், பொறியில் சிக்கியதும் தன் திறமையை மறந்துவிடுகிறது. அப்படித்தான் நீ வெற்றி வேண்டும் என்ற பதட்டத்தில் உன் திறமையைக் காட்ட மறந்துவிட்டாய்…’’

‘’எப்படி ஜெயிக்க வேண்டும்..?”

‘’இது நல்ல புராஜெக்ட். இந்த நிறுவனத்துடன் இணைந்து நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை உன்னுடைய கிளையண்டிற்குத் தூண்ட வேண்டும். அவன் வெற்றி வேண்டும் என்று உன்னிடம் வர வேண்டும். அந்த வகையில் ரிவர்ஸில் பணியாற்று, வெற்றி தானே வரும்…”

‘’அப்படியென்றால்..?’’

‘’நேரடி பலன் எதிர்பார்த்தால் தோல்வி வரும். பதட்டம் வரும். செயலில் மட்டும் ஆர்வம் காட்டுங்கள். மகிழ்ச்சி வரும். தோல்வி அடைந்தாலும், அது வருத்தம் தருவதாக இருக்காது…’’

நம்பிக்கையுடன் திரும்பிப்போனார் நிர்வாகி.

Leave a Comment