• Home
  • யாக்கை
  • நீரிழிவு நோயை நடந்து நடந்து விரட்டுங்கள்.

நீரிழிவு நோயை நடந்து நடந்து விரட்டுங்கள்.

Image
  • கால் இருக்க கவலை எதற்கு?

நம் இந்தியாவை நீரிழிவு நோயின் கேப்பிடல் என்கிறார்கள். ஆம், சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவிக்கிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் நீரிழிவு சோதனை செய்து பார்த்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஏனென்றால் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் மக்கள் நீரிழிவு நோய் பரிசோதனை செய்தவர்கள் அல்ல.

சரி, நீரிழிவு என்றதும் அச்சப்பட வேண்டியதில்லை. அதற்குத் தேவை சரியான கட்டுப்பாடு மட்டுமே. முதலில் சர்க்கரையின் அளவை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.  சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால்  சாப்பிடும் முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு 80 – 120மிலி, சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்து 120 – 160மிலி  இருக்க வேண்டும்.

சாப்பிடும் முன் 140க்கு மேலும், சாப்பிட்ட பின் 200க்கு மேலும் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்று பொருள்.

சர்க்கரை நோய் சிகிச்சையில் ஐந்து முக்கியக் கோட்பாடுகள் உள்ளன.

1. உணவு

2. உடற்பயிற்சி

3. மருந்துகள்

4. பரிசோதனை

5.  நோய் கல்வி

சர்க்கரை நோய் சிகிச்சை என்பது மேற்கண்ட 5 கோட்பாடுகளும் இணைந்த ஒரு கூட்டு சிகிச்சை. இதில் உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்தால் சரியாகிவிடும் என்றோ, உடற்பயிற்சி செய்தால் மட்டுமே சரியாகிவிடும் என்றோ, இன்சுலின் அல்லது மாத்திரை சாப்பிட்டால் மட்டும் போதும் என்றோ எண்ண முடியாது. இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்துதான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். எனவே, இதில் ஒன்று மாறினாலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உடற்பயிற்சியால் நன்மைகள்
தினசரி முறையான உடற்பயிற்சி செய்யும் சர்க்கரை நோயாளிகளுக்கு கீழ்க்கண்ட நன்மைகள் விளைகின்றன.

உடற்பயிற்சி செய்யும் போது தசைகள், கணையத்தில் சுரக்கும் இன்சுலினை நன்றாக செயலற்ற அனுமதிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையில் அளவு குறைகிறது.

இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இருதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் மாரடைப்பு, பக்க வாதம், கால் நரம்புகள், இரத்தக் குழாய்கள் பாதித்தல், இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்தல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

நீரிழிவு நோயுள்ளவர்கள் முறையான உடற்பயிற்சி செய்யும் போது இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு கூடுகிறது, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது, இரத்தம் உறையும் தன்மை மாறுபடுகிறது, இரத்தக் கொதிப்பு குறைகிறது.

உணவுக்; கட்டுப்பாட்டுடன் முறையான உடற்பயிற்சியும் செய்யும் போது உடலிலுள்ள கொழுப்புச் சத்து எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

முறையான உடற்பயிற்சி செய்வதால் மனபதட்டம் குறைகிறது, மனம் அமைதியடைகிறது, நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது, வாழ்க்கை நிலை உயர்கிறது.

உடற்பயிற்சிகளிலேயே எளிமையானதும் சிறந்ததும் நடைப்பயிற்சி தான். அதனால் தான் நடைப்பயிற்சியை உடற்பயிற்சிகளின் ராஜா என்று கூறுகிறோம். நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம், எவ்வளவு கொழுப்பு சக்தியை எரிக்கிறோம் என்பதே முக்கியம்.

நீரிழிவு நோயுள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

1. நடைப்பயிற்சி செய்யும் போது மிருதுவான காலணிகளோ அல்லது கேன்வாஸ் ஷூ  அணிந்தோ நடக்க வேண்டும்.

2. அதிகாலையில் நடப்பவர்கள் குளிரிலிருந்து பாதுகாக்க தலையில் மப்ளர் அணிந்து கொள்ள வேண்டும்.

3. நடைப்பயிற்சி செய்யும்போது இருதய துடிப்பில் வித்தியாசம் இருந்தால் மருந்துவரை அன்றே சந்திக்க வேண்டும்.

நடைப்பயிற்சி செய்பவர்கள்  தினசரி 1 மணி நேரம் நடக்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 6 நாட்கள் நடக்க வேண்டும்.  காலையில் நடப்பது நல்லது. காலையில் நடக்க முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம்.  நடைப்பயிற்சியை செய்ய அருகிலுள்ள பள்ளி அல்லது கல்லூரி விளையாட்டு மைதானங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

ஒரு மணி நேர நடைப்பயிற்சியில் குறைந்தது 15 நிமிடங்கள் உடலை தயார்படுத்தும் நிலைக்கு ஒதுக்க வேண்டும்.  30 நிமிடங்கள் விரைவாக நடக்க ஒதுக்க வேண்டும்.  15 நிமிடங்கள் உடலை திரும்பக் கொண்டு வரும் நிலைக்கு ஒதுக்க வேண்டும்.

நடைப்பயிற்சியின் பலன் முழுவதுமாக உடலுக்கு கிடைக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்பவரின் இருதய துடிப்பு அதிகரிக்க வேண்டும். எந்த அளவிற்கு இருதய துடிப்பு அதிகரிக்க வேண்டும்.

சராசரியாக நமது இருதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. 40 வயதுள்ளவரின் இருதயம் நிமிடத்திற்கு சுமார் 144 முறை 30 நிமிடங்களுக்கு துடிக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் உடலைத் தயார்படுத்தும் நிலையில் 1 ½ கிலோமீட்டரும், விரைவான நடைப்பயிற்சியில் 5 கிலோமீட்டரும், உடலை பழைய நிலைக்கு கொண்டுவரும் நிலையில் 1 ½ கிலோமீட்டரும் ஆக மொத்தம் 1 மணி நேரத்தில் 8 கிலோமீட்டர் நடந்திருப்பார்.

ஆனால் இதே 8 கிலோமீட்டர் தூரத்தை இருதய துடிப்பை கூட்டும் விரைவான நடைப்பயிற்சி செய்யாமல், மெதுவாக 1½ மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ செய்வதால் உடலுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், எந்த அச்சமும் இன்றி நூறாண்டுகள் வாழ முடியும் என்பது மருத்துவ உண்மை.