தன்னம்பிக்கை புத்தகம்
காத்திருத்தல் என்பது வெற்றிக்கான ஒரு முக்கியமான அம்சம். சரியான காலமும் நேரமும் அமையும் வரை காத்திருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். நேர்மறை சிந்தனையுடன் காத்திருக்கக் கற்றுத் தரும் ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார் கட்டுரையாளர்.

லின்னே காக்ஸ் (Linne Cox) – 1957 ஆம் ஆண்டில் பிறந்தவர். நீண்ட தொலைவு நீச்சலில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் முதன்முதலில் நீந்தியவர், 2003ம் ஆண்டு அண்டார்டிக்காவின் -32 குளிரில் ஏறத்தாழ 25 நிமிடங்கள் (1.6 Miles) நீந்திக் கரையை அடைந்தார். இந்த அனுபவத்தை அவரே எழுதி வெளியிட்டிருக்கிறார், அந்த நூல்தான் ஸ்விம்மிங் டூ அண்டார்டிக்கா.
பொதுவாக -32 குளிர்ந்த நிலையில் பெரும்பாலான மனிதர்கள் இறந்து விடுவார்கள் என்பதுதான் மருத்துவ விதி, நரம்பு மண்டலம் கடுமையான பாதிப்படைந்து குருதி உறைவு ஏற்படும், ஆனால், இந்தப் பெண் எதற்காக இப்படி ஒரு சவாலை வாழ்க்கையில் எதிர்கொள்ளத் துணிந்தார் என்பதற்கு லின்னே காக்ஸ் விடையளிக்கிறார்.
“நான் இந்த வகையான ஆய்வுகளையும், சவால்களையும் விரும்புகிறேன். இதுவரை மனிதர்கள் செய்ததைத் தாண்டி, உடலை உந்தித் தள்ளும் எண்ணம் எப்படி என்னை இயக்குகிறது? மனிதர்களால் என்ன செய்ய முடியும்?, மானுடத்தின் மன எல்லைகளை விரிவாக்கும் ஒவ்வொரு சோதனைகளும் ஆபத்தானவை தான். ஆனால், அந்த சாதனையை முதலில் செய்பவர்கள் நாமாக இருப்பதை உணரும்போது எவ்வளவு கடினமான கடல் நீரும் தெளிவான, இலகுவான ஒன்றாக மாறி விடுகிறது, வானத்தில் பறப்பதைப் போல உணர முடிகிறது” என்கிறார்.
46 வயதில் பெரும்பாலானவர்களின் உடலும், மனமும் தேங்கிய நிலையை அடைந்து விடுகிறது, புதிய சவால்களை ஏற்றுக் கொள்வதில் இருந்தும், புதிய இயக்கங்களை நிகழ்த்தும் நிலையில் இருந்தும் அவர்கள் பின்தங்கி விடுகிறார்கள்.
ஆனால், லின்னே காக்ஸைத் போன்றவர்கள் தான் இந்த எல்லைக்கோடுகளைத் தொடர்ந்து நகர்த்தும் கலையைக் கற்பிக்கிறார்கள். அண்டார்டிகாவின் குருதியை உறைய வைக்கும் நீர்ப்பரப்பில் நீந்துவதால் அவர் தனது உடலைப் பணயம் வைக்கிறார், ஆனால், மனதைப் ஆகச்சிறந்த உயரத்துக்கு உயர்த்திக் கொள்கிறார்.
நீந்தும்போது எதிர்மறை எண்ணங்கள் அவரை மிக இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும் போது, நேர்மறையான இலக்கை நோக்கி அவர் நீந்துகிறார், மன எழுச்சியை உருவாக்கி எதிர்மறை சிந்தனைகளை எதிர்கொள்கிறார். இது மனப்பயிற்சியின் மூலமாக மட்டுமே சாத்தியமாகிற விஷயம் என்பதைத்தாண்டி மானுட மனதின் செயல்பாடுகளை இந்த முயற்சிக்குள் உள்ளீடு செய்து ஆய்வு செய்கிறார் என்பதுதான் பெரிய திறப்பு.
சில சமயங்களில் புதிய சாதனைகளை செய்வதற்கு நேரம் எடுக்கும், சில நேரத்தில் நீங்கள் நினைத்தது எதுவுமே குறிப்பிட்ட நேரத்தில் நடக்காது, சில சமயங்களில் நீங்கள் தோற்றுப் போக வேண்டும். நீங்கள் அவமானங்களையும், சிறுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், காத்திருங்கள், பொறுமையாக இருங்கள், காத்திருத்தல் என்பது மிக முக்கியமான விஷயம்.
காத்திருத்தலின் போதுதான் உங்கள் மனம் புதிய சாதனைகளுக்கான ஒத்திகை செய்கிறது, தயாராகிறது, பிறகு ஒரு கணத்தில் நீங்கள் வானத்தில் பறப்பதை போல உணர்வீர்கள். லின்னே காக்ஸ் ஏறத்தாழ அவரது உயிரைப் பணயம் வைத்து அண்டார்ட்டிக்காவின் கரையை அடையும் போது உணர்ந்ததைப் போலவே…
- கை.அறிவழகன்