என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 117
பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு கிடைப்பதற்கு பல்வேறு வகையில் வழிகாட்டி வந்தார். குறிப்பாக உணவை மென்று தின்பதற்கு அதிக முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமின்றி, அதற்கான காரணங்களை மிகத் தெளிவாகப் புரியும் வகையில் விளக்குவார்.
’பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று நம் முன்னோர்களின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. பதினாறு வகை செல்வங்களைப் பெற்றால் மட்டும் பெருவாழ்வு வாழ முடியாது. நோயற்ற வாழ்வு வேண்டுமென்றால் ’நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற சித்தர்களின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவை அரைத்து உண்பவர்களுக்கு உமிழ்நீர் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. உமிழ்நீரில் 27 வகையான என்சைம்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 16 வகையான என்சைம்கள் உணவுடன் கலந்து செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. அப்படி உமிழ்நீர் கலந்த உணவை எடுத்துக்கொள்பவர் நலமாக பெருவாழ்வு வாழலாம் என்பதையே சொல்லி வைத்தார்கள்.
காலை உணவு எடுக்காமல் நேரடியாக மதிய உணவு சாப்பிடுவது, இரவு 11 மணிக்கு மேல் சாப்பிடுவது போன்ற ஆபத்தான பழக்கம் பலரிடம் இருக்கிறது. இது ஆபத்தான பழக்கம். ஏனென்றால் நம் உடல் கடிகாரத்திற்கும் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வோர் உறுப்பும் ஆதிக்கம் செலுத்தும் நேரம் அறிந்து உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
காலை 7 மணி முதல் 8 மணி வரை வயிற்றுக்கான நேரம். ஆகவே, இந்த நேரத்துக்குள் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறுகுடலின் நேரம் என்பதால், இந்த நேரத்திற்குள் மதிய உணவு சாப்பிட வேண்டும். இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்திருக்க வேண்டும். கைக்குத்தல் அரிசி, சிறு தானியங்கள், பயிறுகள் உணவில் முதன்மையாக இருக்க வேண்டும். சாப்பிட்டதும் பழச்சாறு, ஐஸ்க்ரீம் போன்றவை கூடாது. சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரும் பின்னரும் எதுவும் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் ஆலோசனை கூறுவார்.
குழந்தைகள் உடல் நலனில் மேயர் சைதை துரைசாமி அதிகம் அக்கறை காட்டினார். குறிப்பாக சைதை துரைசாமி மேயராக இருந்த காலத்தில் கண் பார்வை செம்மைக்காக வைட்டமின் ஏ, 6 மாதம் தொடங்கி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வருடத்திற்கு இரண்டு தவணை வழங்கப்பட்டன. இதனை அத்தனை குழந்தைகளும் எடுத்துக்கொண்டு பயன் அடையவேண்டும் என்று விரும்பினார்.
அதேபோல், 19 வயதுக்கு உட்பட்ட அனைவரும் தேசிய குடற் புழு நீக்க மாத்திரைகள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டன. இதன் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகள் பயன் அடைந்தனர்.
- நாளை பார்க்கலாம்.