அண்ணாமலை டீம் ஆவேசம்
பெரியாரைத் தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதை நடிகர் விஜய் உணர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்று தி.மு.க.வினர் கூறிவரும் நேரத்தில், ‘இந்துக்களின் எதிரி என்பது உண்மையாகிவிட்டது’ என்று விஜய் மீது கடுமையான விமர்சனம் முன்வைத்திருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
முதல்வர் ஸ்டாலின் போலவே நடிகர் விஜய்யும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. எனவே விஜய் குறித்து முன்னாள் கவர்னரும் முன்னாள் பா.ஜ.க. தமிழகத் தலைவருமான தமிழிசை செளந்தராஜன், ‘’முதல்வர் ஸ்டாலின் போன்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டோம் என்பது போல் அல்லாமல், பெரியார் கொள்கைக்கு நாங்கள் எதிராக இருந்தாலும், கருப்புச் சட்டை அணிவோருக்கு காவிகளின் வாழ்த்துகள். தமிழகத்தில் எதிர்மறை அரசியலை கொண்டு சென்றதற்கு திமுகவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பொய்யை மட்டுமே அரசியலாக கொண்டவர்கள். தேசிய கொள்கையோடு கூடிய மாற்று அரசியல் சக்தி தமிழகத்தில் வர வேண்டும். திமுக பவள விழா மாநாடு கொண்டாடும் வேளையில், திராவிட, மாநில அக்கறையோடு கூடிய தேசிய அரசியல் வேகமெடுக்க வேண்டும் என்னும் உறுதியை நாங்கள் எடுக்கிறோம்.
திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் தான் மாற்று வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேறு வழியில் பயணிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கட்சித் தொடங்கும் முன்னரே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது போன்றவற்றை முன்வைத்து கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சாயலை சாயமாக விஜய் பூசிக் கொண்டிருக்கிறார். பின்னர் தான் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறு சாயம் பூசிக் கொள்கிறாரா என்பது தெரியும்.
இரு கட்சிகளும் அவரை விட்டுவிடுவார்களா. திரைப்படத்தையே வெளியிட அனுமதிப்பதில்லை. மாநாட்டை நடத்த அனுமதிக்க மறுக்கின்றனர். அவர் தேசியத்துடன் வந்தாலாவது பரந்து பட்ட மனதோடு எடுத்துச் செல்வோம். திராவிட சாயத்தை பூசினால் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் பெரியார் திடலுக்கு வந்து மரியாதை செலுத்தியதை அடுத்து விஜய் இந்துக்களின் எதிரி என்பது உண்மையாகிவிட்டது என்று அண்ணாமலை டீம் போட்டுத் தாக்கிவருகிறது.
தேசிய அரசியலை விட திராவிட அரசியலைக் கையில் எடுக்கிறாரா விஜய் என்று புரியாமல் அவரது ரசிகர்களும் குழம்பி நிற்கிறார்கள். இதன் காரணமாக பா.ஜ.க.வின் பி டீம் இல்லை என்பதைக் காட்டியிருக்கிறார். இது நிலைக்குமா என்பதைத் தான் பார்க்க வேண்டும்.