• Home
  • அரசியல்
  • சீமான் பிறந்த நாளில் விஜய் சமாதானத் தூது

சீமான் பிறந்த நாளில் விஜய் சமாதானத் தூது

Image

அதிர்ச்சியில் தவெக நிர்வாகிகள்

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கு நேரடியாக கண்டனம் தெரிவித்த ஒரே நபர் சீமான் மட்டும் தான். இதையடுத்து இரண்டு பக்கமும் சமூகவலைதளத்தில் கடுமையான மோதல் நடந்தது. இந்த நிலையில் திடீரென விஜய் சமாதானம் பேசியிருப்பது த.வெ.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் நாம் தமிழர்களுக்கு மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறது.

சீமான் விஜய் குறித்து, ‘’ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. அண்மையில் வந்த படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் போல். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும்’ என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

ஆனால் அடுத்து நடந்த கூட்டத்தில், சீமானை கண்டுகொள்ள வேண்டாம் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதை விஜய்யின் பெருந்தன்மை என்றே அவரது கட்சியினர் பாராட்டினார்கள்.

இந்த நிலையில் இன்று சீமான் பிறந்த நாள் கொண்டாடப்படுவதையடுத்து, பிறந்த நாள் வாழ்த்து கூறி சமாதானக் கொடியை பறக்க விட்டிருக்கிறார். இது, விஜய் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. அதேநேரம் நாம் தமிழர்கள், ‘’ரொம்ப நன்றி’ என்று விஜய்யை பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து பேசும் விஜய் ரசிகர்கள், ‘’ மூத்த திரைக் கலைஞர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், இன்று தேவை இல்லாமல் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ஒரு வேளை கமலுக்கும் தெரிவித்து சீமானுக்கும் தெரிவித்தால் இதை இயல்பான அரசியல் என்று எடுத்துக்கொள்ளலாம்.

கமல், சீமான் ஆகிய இருவரும் அரசியலில் இருக்கும்போது கமல் வேண்டாம், சீமான் வேண்டும் என்று பாராட்டுவது என்ன அரசியல் என்றே புரியவில்லை. சீமான் மிரட்டலுக்குப் பயந்துவிட்டோம் என்று தான் நினைக்கிறார்கள். இனி, அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியாது. இன்னும் என்னவெல்லாம் குழப்பம் நடக்குமோ, எதுவும் புரியவில்லை’’ என்கிறார்கள்.

Leave a Comment