ஜாலி பாலிடிக்ஸ்
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இம் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கு பந்தக்கால் நடைபெறும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு விஜய் ஆப்சென்ட். ஆனால், இன்று அவரது கடைசி பூஜை விழாவில் ஆஜராகியிருப்பது கட்சியினரை தலைசுற்ற வைத்திருக்கிறது.
இன்றைய பந்தக்கால் நடும் விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பார் என்றே தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு புஸ்ஸி ஆனந்த் முன்னின்று நடத்துவார் என்று சொல்லப்பட்டாலும், சர்ப்பிரைஸாக விஜய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், இன்று காலை அங்கு விஜய் வரவே இல்லை.
எனவே புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் சென்னை மாநாட்டு பந்தல் அமைப்பாளர் ஆனந்தன் பந்தல் காலை நட்டார். கிறிஸ்தவர் விஜய்யை தலைவராகக் கொண்ட கட்சிக்கு அருணச்சலேஸ்வரர் சுவாமி படம், தேவாலய தீர்த்தம், தர்கா புனித நீர் என்று மூன்று மதங்களின் சாஸ்திரப்படி கட்சியின் மாநாட்டுக்கு பந்தக்கால் நடப்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்த் இனிப்பு வழங்கினார். ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வந்தார்கள் என்றாலும் யாரிடமும் புஸ்ஸி ஆனந்த் பேசவில்லை. வந்த காரியத்தை முடித்துவிட்டுப் போயே விட்டார்.
அதேநேரம், இன்று காலை ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படத்துக்குப் பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் பட்டு வேஷ்டி, சட்டையுடன் ஜோராக ஆஜராகியிருக்கும் விஜய், வழக்கத்துக்கு மாறாக நடிகை பூஜா ஹெக்டேயுடன் சந்தோஷமாக கும்மாளம் போட்டிருக்கிறார். கவர்ச்சியாக வந்திருந்த பூஜா ஹெக்டேயுடன் எக்கச்சக்க புகைப்படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறார். எப்போதும் பட விழாக்களில் அமைதியாக இருக்கும் விஜய் இந்த பட பூஜையில் செம கலாட்டா செய்தார் என்கிறார்கள்.
கட்சி விழாவில் கலந்துகொள்வார்கள் என்று காத்திருந்த 5 ஆயிரம் பேரையும் ஏமாத்திட்டு இப்படி பட விழாவில் மட்டும் ஆஜராவது நன்றாகவா இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் புலம்புகிறார்கள்.