என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 73
பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி பதவியில் அமர்ந்ததும் மாநகர மக்கள் நலவாழ்வுக்குத் தேவையான திட்டங்கள் குறித்து ஆழமாக யோசனை செய்தார். அதேநேரம், மாநகராட்சியில் எப்படிப்பட்ட கட்டமைப்பு வசதிகள் கைவசம் இருக்கின்றன, இவற்றைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய இயலும், இன்னும் என்னவெல்லாம் தேவைப்படும் என்பதை முதலில் தெளிவாக அறிந்துகொண்டார்.
சென்னை மக்களின் குறை தீர்க்கும் பணியில், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை தீவிரமாக இயங்கி வந்தாலும், இன்னமும் நிறைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை அறிந்தார் சைதை துரைசாமி.
சென்னை மாநகர மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் நிறைய பிரச்னைகள் இருந்தாலும், கொசு பிரச்னை மிகப்பெரும் சவாலாக இருப்பதை அறிந்தார். தேங்கிய நீர்நிலை அருகில் வசிப்பவர் மட்டுமின்றி மேட்டுக்குடி மக்கள் வரை பெருநகர சென்னையில் வசிக்கும் அத்தனை தரப்பு மக்களும் கொசுவினால் பாதிக்கப்பட்டனர். அதனால் கொசுக்களைக் குறைத்து, அதன் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு விரும்பினார்.
செயலில் இறங்குவதற்கு முன்பு கொசு பிரச்னை குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். ஏனென்றால், சென்னை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுவதும் கொசு பிரச்னை அபாயகரமாக வளர்ந்திருக்கிறது. கொசுவினால் பரவும் நோய்களைக் கண்டு மனித சமுதாயம் பயந்து நடுங்குகிறது.
குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் கொசு பரப்பும் நோயினால் மரணம் அடையும் நபர்கள் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். அதனால் தான், ஆப்பிரிக்காவில் கொசுவை குட்டிச்சாத்தான் என்றே அழைக்கிறார்கள்.
எனவே, முதலில் கொசுக்கள் குறித்தும் அதனால் உருவாகும் நோய்கள் குறித்தும் மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மூலம் நிறைய தகவல்கள் சேகரித்தார். அப்போது தான், கொசுவை ஒழிப்பது மிகவும் சவாலான பணி என்பது தெரியவந்தது.
- நாளை பார்க்கலாம்.