வெறும் கைகளில் விபூதி மேஜிக்..!

Image

ஞானகுரு அத்தியாயம் – 7

ராமச்சந்திரன் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த வீடு, பழைய மோஸ்தரில் இருந்தது. எவ்விதமான நவீனத்துவமும் புகுத்தப்படாமல் கிழடு தட்டிப் போயிருந்தாலும், நன்றாகப் பராமரிக்கப்படுவது உள்ளே நுழைந்ததுமே புரிந்து போனது. ஒவ்வொரு வருடமும் ராமச்சந்திரனின் உறவினர்கள் யாராவது சிலர் வந்து போவதோடு சரி. மற்ற சமயங்களில் இந்த வீடு ஒரு விடுதியாக மாறிவிடுமாம். அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருக்கும் கோவிந்தனாகப் பார்த்து ஏதாவது ஒரு தொகையை ஊருக்கு அனுப்பி வைப்பானாம். கிடைத்த வரை போதும் என்று இந்த குடும்பத்தினர் எதையும் கண்டுகொள்வது இல்லை.

 கோவிந்தனை அறிமுகப்படுத்தினார்கள். அவனது அளவுக்கு மீறிய பணிவைப் பார்க்கும் போதே, சரியான கள்ளன் என்பதைப் புரிந்து கொண்டேன். பாட்டி சாப்பிடக் கூப்பிட்டாள். பூப்போல உதிர்ந்த சாதம்… பக்கத்தில் ‘கமகம’ மிளகு ரசம்… சுட்ட அப்பளம்… இதெல்லாம் பசியை மீண்டும் தூண்ட, வஞ்சனை இல்லாமல் ஒரு கட்டுக் கட்டினேன்.

கோவிந்தன் எனக்காக ஒரு ஜமக்காளத்தை விரித்திருந்தான், கட்டையை அதில் கிடத்திக் கண்ணயர்ந்தேன்.

தூக்கத்தில் ஒரு விழிப்பு

விழிப்பு வந்தது. அந்நியர் இடங்களில் தூங்கி விழிக்கும் நேரத்தில், உடனே கண்களைத் திறந்து கொள்ளாமல், சில நிமிடங்களாவது சுற்றிலும் நடப்பதை காதால் கேட்பதும், உடலால்  கவனிப்பதம்  என் வழக்கம். அன்றும் அப்படித்தான்  கண்களைத் திறக்காமல் தூங்கும் பாவனையில் விழித்துக் கிடந்தேன். அப்போதுதான் அந்த சம்பாஷணையைக் கேட்க நேர்ந்தது.  ராமச்சந்திரனிடம் கிசுகிசுப்பான குரலில் கோவிந்தன் சொல்லிக்கொண்டு இருந்தான்.

’’தம்பி.. நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க, அதான் வெளுத்ததை எல்லாம் பால்னு நம்புறீங்க. ஆனா, நீங்க கூட்டி வந்திருக்கிற ஆள் தப்பானவரா தெரியுறார். இவரைப் போல சாமியார் வேஷம் போட்டவங்கதான் வீட்ல தனியா இருக்கிற பொம்பளைங்களைக் கொன்னுட்டு நகைநட்டை சுருட்டிட்டுப்  போயிடுறாங்க..’’ என்றான்.

’’உஷ்… சத்தமா பேசாதீங்க, விழிச்சிடப் போறார். அவர் வர்றேன்னு சொல்லலை, நாங்களாதான் கூப்பிட்டோம். அவர் விழிச்சதும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வேணா அனுப்பிடலாம்…’’ என்றான் ராமச்சந்திரன்.

’’இல்லேடா… அவர் ரொம்ப நல்லவராத் தெரியுறார்’’  இது பாட்டியின் கிசுகிசு  குரல்.

’’உங்களுக்கு விபரம் தெரியாது பாட்டி… கம்முனு இருங்கோ. இவரு ஒரிஜினலா இல்லேனா டூப்ளிகேட்டான்னு பார்த்திடலாம்… நாம் வர்றவரைக்கும் எதுவும் பேசவேணாம்…’’ என்று சொல்லிவிட்டு கோவிந்தன் வெளியேறுவது தெரிந்தது.

பாட்டியும் ராமச்சந்திரனும் சென்னைக்குப் போனபிறகு நான் இங்கேயே டேரா போட்டுவிட்டால், தன்னுடைய பிழைப்பு கெட்டுவிடுமே என்று கோவிந்தன் பயப்படுகிறான் என்பது புரிந்தது. அதனால்தான் பாட்டி கிளம்பும் முன்பே என்னைக் கிளப்புவதற்கான வேலையில் இறங்குகிறான் போல. சில நிமிடங்களுக்குப் பிறகு, ‘‘அப்பனே… சண்முகா…’’ என்று சொல்லிக்கொண்டு எழுந்து அமர்ந்தேன்.

போலியின் சோதனை

எதுவுமே நடக்காதது போல் பாட்டி காபி கலந்து கொடுத்தாள். ராமச்சந்திரனிடம் மட்டும் லேசான பதட்டம்.  நான் காபியைக் குடித்து முடித்து டம்ளரைக் கீழே வைக்கவும், இரண்டு சாமியார்கள் சகிதம் கோவிந்தன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. இரண்டு சாமியார்களுக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கலாம். முகத்தை உற்றுப் பார்க்கையில் கொஞ்சம் தமிழ்நாட்டு ஜாடை தெரிந்தது.  தாடி, மீசையை மட்டும் மழித்து எடுத்துவிட்டால், தமிழ் சினிமாவில் கதாநாயகனுடன் மோதவிடலாம்… அப்படியொரு திண்ணென்ற உடல்வாகு. ‘எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…’ என உள்மனது சொல்லியது. முதலில் அடி கொடுப்பவனே வெற்றிபெற வாய்ப்பு அதிகம். அதனால் நானே பேச்சைத் தொடங்கினேன்.

’’இவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா…’’ என்று புதிய துறவிகளைக் காட்டி பாட்டியிடம் கேட்டேன்.

ராமச்சந்திரன் ஏதோ சொல்ல முயல, அதற்குள் அவசரமாக கோவிந்தன் உள்ளே புகுந்தான் ‘‘சாமி.. இவங்க காசியிலேயே இருக்கிற நம்ம ஊர் சாமியாருங்க. தமிழ்நாட்டுல இருந்து நீங்க வந்திருக்கிற தகவலைச் சொன்னேன். உங்களை பார்க்க வந்திருக்காங்க…’’  என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.

இரண்டு துறவிகளிடமும் முரட்டுக் கோபம் தெரிந்தது. ‘‘சாமிக்கு பூர்வீகம் எது… எங்கே யார்கிட்ட தீட்சை வாங்கினீங்க…’’ என்று கேட்டார்கள். அந்தக் கேள்விக்குப் பின்னே ஏதோ விஷமம் தெரிந்தது.  அவர்கள் கேள்வியை உதாசீனப்படுத்தி, என் ஜிப்பாவில் கைவிட்டு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டேன்.

’’ராமச்சந்திரா இங்கே வா…’’ என்றேன்.

தயங்கியபடி அருகே வந்தவனிடம், ‘‘கையைக் காட்டு…’’ என்றேன். நீட்டினான்.

திருநீறு மேஜிக்

 ஜிப்பாவுக்குள் நுழைத்திருந்த கைகளை வெளியே எடுத்துக் கைகூப்பி வணங்கினேன். பின்னர் ராமச்சந்திரனின் உள்ளங்கை மேல் என் பெருவிரல், ஆட்காட்டி விரல் இரண்டையும் சேர்த்து நசுக்க… கை விரல்களில் இருந்து பொலபொலவென விபூதி கொட்டியது. ராமச்சந்திரன் வியந்துபோய் வாய்பிளக்க… பாட்டியின் கைகளிலும் அப்படியே விபூதி வரவழைத்துக் கொடுத்தேன். கோவிந்தனுக்கும் கொடுத்துவிட்டு புதிய துறவிகளிடம் வந்தேன்.

’’சாமிகளே… நதிகளுக்கும் ரிஷிகளுக்கும் மூலம்  இருக்கிறதா?’’ என்று குரலில் கடுமைகாட்டிக் கேட்டேன்.  வெறும் விரல்களில் விபூதி வரவழைக்கும் மந்திரத்தில் அவர்கள் பயந்து போய் நின்றார்கள். அசட்டு சிரிப்பையே பதிலாகச் சொன்னார்கள். கோவிந்தன் முகத்தில் ஈயாடவில்லை.

திகைத்து நின்ற பாட்டியிடம், ‘‘நான் கிளம்புகிறேன்… சந்தேகம் சர்வநாசம்… . இனி நான் இங்கே இருப்பது சரியல்ல…’’ என்று சொல்லி ஓரடி எடுத்து வைத்தேன். அதற்குள் என் காலில் ‘பொத்’தென்று விழுந்தான் ராமச்சந்திரன்.

’’சாமி… மன்னிச்சுக்கோங்க… தெரியாமப் பண்ணிட்டோம். நீங்க பெரிய யோகின்னு தெரியாத அற்பப் புழு நாங்கள்…’’ என்று காலைப் பிடித்து மன்றாடினான்.

’’நல்லவர்களைப் புரிந்து கொள்… கெட்டவர்களை விலக்கி வை’’  என்ற படி விருட்டென்று அந்த வீட்டைவிட்டு வெளியேறினேன்.

விபூதி உருண்டைகள்

பாதுகாப்பான தூரம் கடந்து வந்தபிறகு, திரும்பிப் பார்த்தேன். யாரும் பின்தொடரவில்லை. என் கோபம் அவர்களை பயமுறுத்தி இருக்க வேண்டும். மனதுக்குள் சிரித்துக் கொண்டு என்னை சிக்கலில் இருந்து காப்பாற்றிய விபூதி உருண்டைகளை ஜிப்பாவில் இருந்து எடுத்துப் பார்த்தேன். மிளகு போன்ற அளவில் உருட்டப்பட்ட உருண்டைகள் என்னைப் பார்த்துக் கண்ணடித்தன. குற்றால மலையில் ஏகாந்தமாய் சுற்றித் திரிந்த போது, ஒரு சாமியார் சொல்லிக் கொடுத்ததுதான், இந்த விபூதி வித்தை. நல்ல தரமான விபூதியை சூடான வடிதண்ணீரில் கலந்து, கொஞ்சம் பன்னீர் தெளித்து சின்னஞ்சிறு உருண்டைகளாக்கி வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். எப்போதும் அந்த உருண்டைகளை கொஞ்சம் மலர்களுடன் பைகளில் வைத்திருக்க வேண்டும்.

 அந்த விபூதி உருண்டைகள் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால், கை விரல் இடுக்குகளில் மறைத்துக் கொள்ள முடியும். ஆசிர்வாதம் கேட்டு பக்தர்கள் வரும் நேரத்தில், கடவுளை நமஸ்காரம் செய்வது போன்று இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, அந்த உருண்டையை  பெருவிரலுக்கு கொண்டு வந்து ஆட்காட்டி விரலால் பிடித்துக் கொள்ளவேண்டும். பக்தர்கள் உள்ளங்கையைக் காட்டச் சொல்லி, கெட்டியாக இருக்கும் விபூதி உருண்டையை அழுத்தி உடைத்தால்… பொலபொலவென விபூதியாகக் கொட்டும். சாதாரண மக்களை மயக்குவதற்கு இது போதும். இந்த சாதாரண எளிய வித்தை, அந்த காசி நகர சாமியார்களையும் மிரட்டியதுதான் என் அதிர்ஷ்டம்.

காசி தெருக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே மீண்டும் கங்கைக் கரையை சரணடைந்தேன். ஒரு தேய்பிறை இரவு. சற்று தூரத்தில் பிணங்கள் எரிந்து கொண்டு இருந்தன. எத்தனை நேரம் அப்படியே மோனத்தில் அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. சட்டென்று உள்ளுணர்வில் ஏதோ உறைக்க… பின்னால் திரும்பிப் பார்த்தேன். இறைஞ்சும் பார்வையுடன் ராமச்சந்திரனும் பாட்டியும் நின்று கொண்டு இருந்தனர்.

  • ஞானகுரு வருவார்

Leave a Comment