வெற்றி துரைசாமி நினைவு நாள்

Image

அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சர்யங்களை வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் என்பார்கள். ஆச்சர்யம் மட்டுமல்ல, அவலங்களும் நிகழும் என்பதற்கு உதாரணமே வெற்றி துரைசாமியின் அகால மரணம்.

தந்தை சைதை துரைசாமி மனிதநேயர் என்றால் மகன் வெற்றி வன ஆர்வலர். பறவை, விலங்குகள் மீது பேரன்பு கொண்டவர். மிகச் சிறந்த ‘வைல்ட் லைஃப்’ புகைப்படக் கலைஞர். நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பில் சிறந்த புகைப்பட கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்படியொரு முயற்சிக்கான பயணத்தில் தன் உயிரைப் பறி கொடுத்தவர்.

புதுப்புது டெக்னாலஜிகளின் காதலன், அந்த வகையில் தான் நடிகர் அஜித்குமாரின் நண்பராகத் திகழ்ந்தவர். திரையுலக முக்கியப் புள்ளிகளுக்கு நெருக்கமானவர். வெற்றி நினைத்திருந்தால் மிகப்பெரும் ஹீரோவை வைத்து ஒரு சினிமாவை இயக்கியிருக்க முடியும். ஆனால், அவருடைய கனவு வேறு.

அதனாலே விதார்த், ரம்யா நம்பீசன் போன்ற கலைஞர்களுடன் மிருக நேயத்தைக் காட்டும், ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கினார். காளைகள் மீது அன்பு வைத்திருக்கும் ஒரு பெண், கடன் காரணமாக அதனை இழக்க நேர்ந்தால் எத்தகைய துயரத்தை எதிர்கொள்வார் என்பதே கதை. இந்த படம் கமர்ஷியல் வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் சமரசம் செய்துகொள்ளாமல் எடுத்து வெளியிட்டு சில விருதுகளை மட்டும் வாங்கினார்.

சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பின் தங்கி இருக்கும் மாணவர்களின் கலைக் கனவுகளை நிறைவேற்ற விரும்பிய ராஜநாயகம், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோரின் கனவை நனவாக்கியவர் வெற்றி.

அவர் விரும்பியிருந்தால் அரசியல் பிரபலம் ஆகியிருக்கலாம், கல்வித் தந்தையாக மாறியிருக்கலாம். ஆனால், புகழ் வெளிச்சங்களை விரும்பாமல் விலகியே இருந்தார். அதனாலோ என்னவோ விரைவில் உலகை விட்டுப் போய்விட்டார்.

பெற்ற பிள்ளையை இழப்பது ஆகப்பெரும் சோகம். மக்கள் சேவையாளர் சைதை துரைசாமிக்கு இந்த துயரம் நிகழ்திருக்கக் கூடாது. ஆனால், ‘எனக்கு லட்சக்கணக்கான பிள்ளைகள் இருக்கிறார்கள்’ என்று அந்த வேதனையை விழுங்கிக் கொண்டார்.

இன்னமும் அவர் இந்த இழப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பது அவரை அருகிலிருந்து கவனிக்கும் நபர்கள் நன்கு அறிவார்கள். மீண்டு வரட்டும், மீண்டும் வரட்டும். மக்கள் மற்றும் மாணவர் சேவைக்கு சைதை துரைசாமி தேவை.

Leave a Comment