பெரியாரின் பகுத்தறிவுக்கு அவமானம்
தி.மு.க. சார்பில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடுமையான விமர்சனம் முன்வைத்தனர். இப்படி ஒரு விழாவை அமைச்சர் முன்னின்று நடத்தக்கூடாது என்று கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டிய திராவிடர் கழகத்தின் சார்பில் ஆரம்பத்தில் இருந்தே எந்த அறிக்கையும் வரவில்லை.
அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்கு அர்ஜூன் சம்பத் போன்ற மூன்றாம் தர அரசியல்வாதிகளை ஆன்மிகவாதிகள் போன்று அழைத்து கெளரவம் செய்ததை தி.மு.க.வினரே ரசிக்கவில்லை. இது குறித்தும் வீரமணி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு விமானம் ஏறியதும் தன்னுடைய பகுத்தறிவுப் பாடத்தைக் காட்டியிருக்கிறார் திராவிடர் கழகத்தின் ஆசிரியர் வீரமணி. முருகன் மாநாடு குறித்து அரசுக்கு கண்டனம் என்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’அறநிலையத் துறை அமைச்சரின் பணி என்பது ஆறு மரக்கால் அரிசி என்றால், அதை அளவுப்படி சரியாகப் போடுகிறார்களா என்று பார்ப்பதுதானே தவிர, சாமி கும்பிடுவதோ, ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதோ அல்ல’’ என்று பளிச்சென்று சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியது நமது முக்கிய கடமையாகும். பாராட்டவேண்டிய நேரத்தில் மனந்திறந்து பாராட்டுவது போலவே, சறுக்கல் நேரும் நேரத்தில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.
முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்துலக முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 8 மற்றும் 12 ஆவது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவையாகும். 8 ஆவது தீர்மானம்: ‘‘கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’’ 12 ஆவது தீர்மானம்: ‘‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.’’
இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச் சார்புடையன அல்ல! நமது தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் – இதற்குமேல் விளக்கத் தேவையில்லை.
பழனிக் கோவிலின் உண்மை வரலாறு என்ன? இந்தப் பழனிக் கோவிலை எடுத்துக் கொண்டாலே, இதன் பூர்வீக வரலாறு என்ன? இந்தக் கோவிலை உருவாக்கியவர் யார்? பூசாரிகளாக (அர்ச்சகர்களாக) இருந்தவர்கள் யார்? இப்பொழுது பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதன் பின்னணி சூழ்ச்சி என்ன என்பது முக்கியமானதாகும்.
நவபாஷாணத்தினால் போகரால் நிறுவப்பட்டதுதான் பழனி முருகன் சிலை.’’ இன்றைக்கும் கோவிலின் உட்புறம் உள்ள திருச்சுற்றில் சித்தரான போகர் சமாதி உள்ளது. போகர் வழிவந்தவர்கள்தானே பூசை செய்து வந்தனர் போகருக்குப் பின்னர், அவர்தம் சீடர் புலிப்பாணியாராலும், அவருக்குப் பின்னரும், புலிபாணியாரின் வழிவந்த சீடர்களாலும் பூசை முதலியன நடைபெற்று வந்தன. பழனிக் கோவில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் வந்தது எப்படி?
இந்த உண்மை வரலாற்றின் அடிப்படையில், ‘‘அனைத்து முத்தமிழ் முருகன் மாநாடு’’ நடத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவது பொருத்தமானதாகும். அதிலும் தற்போது மிஞ்சியது ஏமாற்றமே’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பெரியாரின் துணிச்சலை வீரமணியிடம் எதிர்பார்த்தால் ஏமாற வேண்டியது தமிழர்கள் தான்.