ஞானகுரு ஆலோசனை
வீட்டில் வாஸ்து குறை இருக்கிறது, அதை தயவு செய்து சரிசெய்துகொடுங்கள் என்று ஞானகுருவை கெஞ்சி வீட்டுக்கு அழைத்துவந்தார் தொழிலதிபர் ராஜரத்தினம். புன்னகையுடன் வீட்டை நன்றாக சுற்றிப் பார்த்தார் ஞானகுரு. வீடு பெரியபெரிய ஜன்னல்களுடன் கட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டிற்குள் வெளிச்சம் வராதவகையில் ஜன்னல்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. முதலில் அனைத்தையும் திறந்து வைக்கச் சொல்லிவிட்டு பங்களாவின் வெளியே இருக்கும் புல்வெளிக்குப் போனார். ராஜரத்தினமும் ஆட்டுக்குட்டி போல் பின் தொடர்ந்தார்.
’’ராஜரத்னம்… வேலை விஷயமாக அல்லது சுற்றுப்பயணமாக எந்த ஊருக்குப் போனாலும், சில தினங்களிலேயே அந்த ஊர் அலுப்புத்தட்டி சொந்த ஊருக்குத் திரும்பும் ஏக்கம் அனைவருக்கும் வந்துவிடும். சொந்த ஊருக்குத் திரும்பி, சொந்த வீட்டில், தனட்து அறையில் படுத்தபின்னர்தான் அக்கடாவென்று திருப்தியாக இருக்கும். அந்த நிம்மதியை அனுபவித்திருக்கிறாயா…?’’
’’ஆமாம் சாமி…’’ தலையாட்டினார்.
’’திருமணமான புதுப்பெண்ணுக்கு மாமியார் வீடு பழகிப்போக சில மாதங்களாவது ஆகும். அதுபோலவே உங்களுக்கும் இந்த வீடு இப்போது கண்ணாமூச்சு காட்டுகிறது. தொடர்ந்து நீங்கள் இங்கு புழங்கும்போது, இந்த வீடும் உங்கள் அங்கமாக மாறிவிடும்…’’ என்றார்.
’’நீங்க சொல்றது சரிதான் சாமி… வீட்டைச் சுத்திப் பார்த்தீங்க, வாஸ்து குறை இருக்கான்னு சொல்லலையே…’’ என்று கேட்டார்.
’’பிரபலமான வாஸ்து ஜோதிடரின் ஆலோசனைப்படிதானே வீட்டைக் கட்டினீர்கள்? பின் எதற்காக இன்னொருவர் சொன்னதும் குழப்பம்?’’
’’சாமி… ஜோதிடம் என்பது முழு உண்மை. ஆனால் சில ஜோதிடர்கள் சரியாகக் கணிக்காமல் தப்பு செய்துவிடுவது சகஜம்தானே. அப்படி இந்த வீட்டின் வாஸ்து தவறாகக் கணிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் குருக்கள் சொன்னார்…’’
’’ஜோதிடம் உண்மையான கணக்கு என்றால், யார் அந்தக் கணக்கைப் போட்டாலும் சரியான விடை மட்டுமே வரவேண்டும். ஆளுக்கொரு விடை வருகிறது என்றால்…? அது கணிதமும் அல்ல, உண்மையும் அல்ல. உன்னுடைய பழைய வீடு கட்டி எத்தனை வருடங்கள் ஆகிறது… அதை வாஸ்து பார்த்துக் கட்டினீர்களா?’’
‘‘அது எப்படியும் இருபது வருஷத்துக்கு மேல இருக்கும், அப்போ வாஸ்து எல்லாம் பார்க்கலை…’’ என்றார்.
’’ஏன்?’’
’’அப்ப வாஸ்து பத்தி எனக்கு எதுவுமே தெரியாது சாமி…’’
’’உண்மைதான்… அப்போது உன்னிடம் நிறைய பணம் இருக்கவில்லை, அதனால் வாஸ்து பற்றி நீ கவலைப்படவில்லை. வீடு கட்டும்போது பூமி வலுவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். காற்றோட்டம், தண்ணீர், வாகனங்கள் நிறுத்த இடம், புழங்குவதற்கு தாராள இடம், பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே போதுமானது. எந்த ஒரு வீட்டையும் திசைகள் கட்டுப்படுத்தாது.
உன் வீட்டின் மேற்குச் சுவர் என்பது, அண்டை வீட்டுக்காரனுக்கு கிழக்குச் சுவராக இருக்கிறது. ஒரே சுவர் உனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதாகவும், அண்டை வீட்டுக்காரனுக்கு கெடுதல் செய்வதாகவும் எப்படி இருக்கமுடியும்? இந்த உலகம் உருண்டை எனும்போது எப்படி நான்கு திசைகள் இருக்க முடியும்……’’
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ராஜரத்னம், ‘‘அப்படின்னா பரிகாரம் மட்டும் செஞ்சா போதுமா?’’ என்று இழுத்தார்.
’’வாஸ்து என்பது வீடு கட்டும் முன்னர் நீ ஜோதிடனை நம்புவதற்காகத் தரும் விலை. வாஸ்து பரிகாரங்கள் மேலும் சில ஜோதிடர்களின் வாழும் கலை. சிரிக்கும் புத்தரோ, அதிர்ஷ்ட மீன்களோ, தண்ணீர் பூக்களோ ஏன் திசைகளோகூட உன் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது. இவற்றால் கடைக்காரனுக்கு லாபம் வரலாம், உனக்கு ஒரு பொய்யான நிம்மதி கிடைக்கலாம்… அவ்வளவுதான்’’ என்றார்.
’’ஆனா… இந்த வீட்டுக்கு வந்தபிறகுதானே…’’ என்று லேசாக இழுத்தார்.
’’நீண்ட காலமாக திருமணம் முடியாதவர்கள் நாலைந்து வருடமாக ஒவ்வொரு திருத்தலமாக போய் பரிகாரம் செய்து வருவார்கள். ஏதாவது ஒரு திருத்தலம் சென்று வந்த நேரத்தில் திருமணம் முடிவாகும். உடனே, ‘எல்லாம் அந்த குறிப்பிட்ட திருத்தல மகிமைதான்’ என்பார்கள். அப்படியென்றால் அதுவரை அவர்கள் சென்று வந்த அத்தனை திருத்தலங்களும் மகிமை இல்லாதவையா? நடக்க வேண்டியவை அதனதன் நேரத்தில் நடந்து கொண்டே இருக்கும். உன் குடும்பத்தாரின் உடல்நிலை, வியாபாரம் போன்றவற்றை இந்த வீட்டோடு முடிச்சுப் போடாதே… ஆனாலும் உனக்கு திருப்தி கிடைக்கவேண்டும் என்றால், 21 நாட்கள் இரவு படுக்கப்போகும் நேரத்தில், வீட்டின் நான்கு மூலைகளிலும் கற்பூரம் ஏற்றி வை. தீய சக்திகள் எதுவும் உள்ளே நுழையவே முடியாது’’ என்றேன். இந்த எளிய பரிகாரம் ராஜரத்னத்துக்கு மிகுந்த திருப்தியை கொடுத்தது அவரது கண்களில் தெரிந்தது.
மனிதனுக்குத் தேவை உண்மையல்ல. எளிமையான தீர்வுகள்தான். கற்பூரம் ஏற்றுவதால் எதுவும் நடக்காது என்றாலும், அதைத்தான் தீர்வாகச் சொன்னார் ஞானகுரு. ராஜரத்னத்தின் நிம்மதியைப் பார்த்து சிரித்தார் ஞானகுரு.