- 40 நாட்கள் ரெஸ்ட்
வைகோவுக்கு டைட்டானியம் பிளேட் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெல்லை திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற வைகோ கால் தடுமாறி கீழே விழுந்ததில் தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மிகுந்த வேதனையில் விழுந்தார். இதையடுத்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.
சென்னையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு தன்னுடைய உடல் நிலை குறித்து வைகோ பேசியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது.
இதுகுறித்து துரைவைகோ, ‘இன்று தலைவர் வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார்..! தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள்.
நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும். தலைவர் அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்…’’ என்று தெரிவித்திருக்கிறார்.
நலமுடன் திரும்பட்டும்.