ஐயப்ப பக்தர்களுக்கு வாபர் சமாதி தடை

Image

மத நல்லிணக்கத்துக்கு முடிவு கட்டிட்டாங்க

ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இஸ்லாமியர்கள் வழிபடும் வாபர் சமாதிக்கும் சென்று வருவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ‘வாபர் சமாதியைப் புறக்கணிப்போம்’ என்று தீவிர இந்துக்கள் நீண்ட நாட்களாகவே குரல் கொடுத்துவருகிறார்கள். அதற்கு விடை அளிப்பது போன்று, ’ஐயப்பனுக்கும், வாபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தேவப்பிரசன்னத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

சபரிமலையில் கேட்கப்படும் தேவப்பிரசன்னம் என்பது முக்கியமான ஒன்று. அதில் மூன்று தேவபிரசன்னதிலும் வாபர் சமாதி என்பது வரவில்லை என்கின்ற நிதர்சனமான உண்மையை ‘தேவசம் போர்டு’ வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்துமுன்னணியும், ஐயப்பா சேவா சமாஜமும் தொடர்ந்து கூறி வருவது என்னவென்றால், ‘’’ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, நமது தெருக்களில் ஏதேனும் இறப்பு சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடந்தால், அந்த தெருவிலே குடியிருக்காமல் சுத்தவத்தமாக இருந்து, சபரிமலை ஏறி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். இந்த மாதிரி விரதத்தை கடைப்பிடித்து வந்தவர்கள், கோவில் போகும் போது, வழியில் பேட்டை துள்ளுதல் நிகழ்ச்சி முடிந்து வாபர் சமாதிக்குள் இருமுடியோடு செல்கிறார்கள். இதனால் 48 நாட்கள் விரதம் இருந்த எந்த பலனும் இல்லாமல் பாவத்தோடு திரும்பி வருகிறார்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். இன்று தேவப்பிரசன்னமே கூறிவிட்டது வாபருக்கும் ஐயப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே இனி, ஐயப்ப பக்தர்கள் யாரும் வாபர் சமாதிக்குச் செல்லக் கூடாது’’ என்று தடை விதித்திருக்கிறார்கள்.

ஐயப்ப சுவாமி தான் வீற்றிருக்கும் மலையிலேயே வாவருக்கும் ஒரு இடமளித்து, தன்னை தரிசிக்க வருவோர் அனைவரும் வாவர் சாமியை முதலில் தரிசித்துவிட்டு, அதன் பின்பு தன்னை தரிசனம் செய்ய வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவரையும் தன்னுடனேயே சேர்த்துக்கொண்டார் என்று காலம் காலமாக சொல்லி வருகின்றனர். இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வழிபாட்டை எதிர்ப்பவர்கள், ‘’இஸ்லாமியர் இங்கு வந்ததே மொகலயர் காலத்தில்தான்.அதாவது 1000 வருடங்கள்! ஐயப்பன் வரலாறு கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. வாபராவது ஐயப்பன் நண்பராவது. இந்துமத அடையாளத்தை அழிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. எனவே, இனியும் முட்டாள்தனமாக வாபர் சமாதியில் வழிபட வேண்டாம்’’ என்று கூறியிருக்கிறார்கள்.

பொதுவாக வட மாநிலங்களில் ஒரு மதத்தினர் வேறு மதத்தினர் வழிபாட்டுத் தலங்களில் நுழைவதே இல்லை. தென்னாட்டில் அந்த கலாச்சாரம் கிடையாது. மத நல்லிணக்கம் போன்று இந்துக்கள் வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் செல்வது வழக்கம். அதேபோல் வாபர் சமாதிக்குச் சென்று வந்தனர். இது மூடத்தனம் என்பதால் முடிவு கட்டபட்டுள்ளது.

அதேநேரம், இந்த மூடத்தனத்தை தேவப்பிரசன்னம் என்ற மூடத்தனத்தின் பெயரில் முடிவு கட்டியிருப்பது தான் கேள்வியாக மாறியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சொல்லாத தேவப்பிரசன்னத்துக்கு இப்போதுதான் வாபருக்கும் ஐயப்பனுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததா..? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Comment