அன்புக்கு இல்லை எல்லை
வாழ்க்கையை ஒவ்வொரு வயதினரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதுண்டு. குழந்தைகளுக்கு பெற்றோரைத் தாண்டி எந்த வாழ்க்கையும் இல்லை. மாணவ பருவத்தினர், படித்தால் வாழ்க்கையை ஜெயித்துவிடலாம் என்று நினைப்பார்கள்.
வேலைக்குச் செல்லும் போது, நிறைய சம்பாதித்தால் வாழ்க்கை வசமாகும் என்று நினைப்பார்கள். குடும்பஸ்தனாக மாறியதும், சேமிப்பு இருந்தால் வாழ்க்கை நம் கையில் என்று நம்புவார்கள். பிள்ளைகள் வளரும்போது, அதிகம் உழைத்தால் அதிக நன்மை கிடைக்கும் என்று உழைப்பார்கள். பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்துவிட்டால், கடமைகள் முடிந்து நிம்மதியாக வாழ்க்கை இருக்கும் என்று நம்புவார்கள். முதுமை வந்ததும், இளமையை ரசிக்காமல் வாழ்ந்துவிட்டேனே என்று வருந்துவார்கள்.
இப்படியெல்லாம் நினைத்து குழப்பிக்கொள்ளாமல், வாழ்க்கையைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமா..? சின்னச்சின்ன உண்மைகளைப் புரிந்துகொண்டால் போதும்.
- நாம் வாழ்வதற்கு குறைவான நாட்களே எஞ்சியிருக்கிறது என்பதை ஞாபகம் வையுங்கள். 100 ஆண்டுகள் என்றாலும், அது குறைவானதே. எனவே, ஒவ்வொரு நாளையும் கடைசி நாள் போன்று எண்ணி செயல்படுங்கள்.
- பெற்றோர், மனைவி, கணவன், குழந்தை, உறவு, நட்பு எல்லோரையும் நேசியுங்கள். யார் மீது குற்றம், குறை இருந்தாலும், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, நிபந்தனையற்ற அன்பு செலுத்துங்கள்.
- இந்த உலகில் எல்லாவற்றையும்விட முக்கியம் நம் உடல். எனவே, உடம்பை காதல் செய்யுங்கள். உடல் நலனுக்கு முக்கியம் கொடுங்கள்
- முடிந்த வரையிலும் எளியவருக்கு உதவி செய்யுங்கள். அதாவது, பெரிய கடைகளில் பொருட்கள் வாங்குவதைக் குறைத்து குட்டிக்கடைகளிலும், ரோட்டு வியாபாரிகளிடம் பேரம் பேசாமல் வாங்குங்கள். அதுதான், எளியவருக்கு நீங்கள் செய்யும் உதவி.
- குழந்தைகளுடன் இருப்பதற்கும், முதியவர்களிடம் பேசுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். முதியவர்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசினாலும், ஆச்சர்யத்துடன் கேட்கப் பழகுங்கள்.
- யாரேனும் செய்வது தவறு என்று தெரியவந்தால், தடை போடாதீர்கள். ஏனென்றால், அது சரியாகவும் இருக்கலாம். அதுதவிர, அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் மிகச்சிறந்த ஆசானாக இருக்கும்.
- ஏதேனும் ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ள ஆசைப்படுங்கள். அது, இசைக் கருவியாக இருக்கலாம் அல்லது மூலிமை மகத்துவமாக இருக்கலாம். வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள்.
- எல்லோரையும் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் மனதார பாராட்டுங்கள். இதனால் நீங்கள் ஒருபோதும் குறையப்போவதில்லை.
- உங்களை யாரேனும் விமர்சனம் செய்தால், அதற்காக கவலைப்பட எதுவும் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதேபோல், பிறருடைய பாராட்டுக்களையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். யாரையும் ஒருபோதும் யாருடனும் ஒப்பிட வேண்டாம்.
- தோல்வி, துன்பம் வரும்போது அதனை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் ஒன்றும் குடி முழுகப்போவதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
- யாரையும் திருத்துவது உங்கள் வேலை இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அறிவுரை கொடுக்கிறேன் என்று பிறர் மனதை நோகடிக்காதீர்கள்.
- உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதை செய்வதற்கும், அனுபவிக்கவும் தயங்க வேண்டாம்.
- பணம் தேவைதான், ஆனால் பணத்தால் உறக்கத்தைக்கூட வாங்கிவிட முடியாது என்பதில் தெளிவாக இருங்கள்.
- உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள் இல்லாவிட்டாலும், இந்த உலகம் சிறப்பாகவே இயங்கும். உங்கள் குடும்பமும் அடுத்த கட்டத்துக்குப் போய்க்கொண்டே இருக்கும்.
- வாழ்க்கையில் வெற்றி என்பதோ, தோல்வி என்பதோ எதுவுமே இல்லை. எல்லாமே அனுபவங்கள்தான். இதை புரிந்துகொண்டால் போதும், வாழ்க்கை சுலபமாகிவிடும்.