• Home
  • அரசியல்
  • உதயநிதி குளறுபடி செஞ்சா குத்தமில்லியா..?

உதயநிதி குளறுபடி செஞ்சா குத்தமில்லியா..?

Image

எகிறி அடிக்கும் பா.ஜ.க.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த் தாய் இரண்டு முறை பாடப்பட்டதும், இரண்டு முறையும் தவறாகப் பாடியதும் பெரும் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. டிடி நிகழ்வுக்கு கவர்னரை பொறுப்பேற்கச் சொன்ன உதயநிதி, இந்த குளறுபடிக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நெருக்கடி கொடுக்கிறார்கள்.

இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன், ‘’சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா?

செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்’’ என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்.’’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Leave a Comment