ஸ்டாலின் உத்தரவு ஏற்று முதல் நிகழ்ச்சி
அமெரிக்கா செல்வதற்கு முன்பு துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், செந்தில் பாலாஜி வெளியே வந்த பிறகே அமைச்சரவை மாற்றம் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனாலே, துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை.
அதேநேரம், அரசு திட்டம் மட்டுமின்றி பெரிய நிகழ்ச்சிகள் எல்லாமே உதயநிதி தலைமையில் மட்டுமே நடக்க வேண்டும். அமைச்சர்களே எந்தத் திட்டத்தையும் தொடங்கக்கூடாது என்று அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டது மட்டுமின்றி, இதனை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கும் கூறியிருப்பதாக செய்தி வெளியானது.
இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்று போக்குவரத்துத் துறையின் முதல் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து உதயநிதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘’பொதுப் போக்குவரத்தின் தரத்தினையும் – சேவையையும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூபாய் 90.52 கோடி மதிப்பில், இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 150 அதிநவீன பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவற்றின் இயக்கத்தை பல்லவன் இல்லத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தோம். மேலும், அப்பேருந்துகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தோம். இந்தப் புதியப்பேருந்துகள், பொதுமக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தட்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
உதயநிதிக்கு இது டிரெயினிங் காலம்.