என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 89
இயற்கை மருத்துவம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் மேயர் சைதை துரைசாமிக்கு நொச்சி செடியின் மருத்துவப் பயன்கள் மிகவும் நன்றாகத் தெரியும் என்பதால், அந்த உண்மைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார்.
பொதுநலச் சங்கங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் நொச்சிக் கன்றுகளை நடவும், பகுதிவாசிகளுக்கு இலவசமாக விநியோகிக்கவும் எத்தனை செடிகள் வேண்டும் என்று தெரிவித்தால், அவற்றை மாநகராட்சி இலவசமாக வழங்கும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதர நலச் சங்கங்கள், அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்களும் நொச்சிச் செடிகள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்தார்.
இயற்கை முறையில் கொசுவை விரட்டுவதற்கு நொச்சி செடி சிறந்தது. அதோடு சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்புகிற ஏடிஎஸ் கொசுக்களுக்கு நொச்சி இலையின் வாசனை ஆகாது. உடல் வலி, சோர்வு, தசை வலியால் அவதிப்படுபவர்கள், வெந்நீரில் நொச்சி இலை போட்டுக் குளித்தால் புத்துணர்வு அடைய முடியும். அதேபோன்று தலைவலியால் அவதிப்படுபவர்கள் நொச்சி இலையுடன் சிறிது சுக்கு சேர்த்து அரைத்து தலையில் பற்று போட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஜலதோஷம், மூக்கடைப்புக்கு நொச்சி இலையை காயவைத்து அனலில் போட்டு, அதில் வரும் புகையை சுவாசிக்க நல்ல பலன் கிடைக்கும். நொச்சி இலையைக் கசக்கி அதன் சாற்றை சுத்தமான வெள்ளை துணியில் போட்டு முகர்ந்துவந்தாலும் மூக்கடைப்பு நீங்கும். நொச்சி இலை சாறை மூக்கின் மேல் தடவி பற்றும் போடலாம்.
தலையில் நீர் கோர்வை, மண்டையில் நீர் கோர்வை, தலைபாரம் பிரச்சனை இருப்பவர்கள் நொச்சி இலையில் வேதுபிடிப்பது நல்லபலன் கொடுக்கும். நொச்சி இலை ஆவி பிடிப்பதன் மூலம் தலையில் நிற்கும் நீர் முழுக்க வியர்வையாகி வெளிப்படுவதுடன் சுவாசப் பாதையும் சுத்தம் செய்யப்படும். குளிர் காய்ச்சலால் அவதிப்படுபவர்களும் நொச்சி இலை கொண்டு வேது பிடிப்பதன் மூலம் தீர்வு காண முடியும்.
மூட்டுவலி இருப்பவர்கள் நொச்சி இலைச்சாறை மூட்டுகளின் மீது தடவி வந்தாலும் வலி குறையும். புண்களின் மீது இதன் சாற்றைத் தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும். நொச்சி இலையைப் பறித்து துணிப்பையில் அடைத்து தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் போய்விடுவதுடன் கழுத்துவலி நீங்கி நிம்மதியான நல்ல தூக்கமும் கிடைக்கும்.
ஆகவே, வீட்டுக்கு இரண்டு நொச்சி கன்றுகள் வழங்குவதற்கு முன்வந்த சைதை துரைசாமி, கொசு ஒழிப்புக்கு மேலும் சில பணிகளிலும் தீவிரம் காட்டினார்.
- நாளை பார்க்கலாம்.