ஞானகுரு பதில்கள்
கேள்வி : வாழ்வில் வரும் இடையூறுகளை வெற்றி கொள்வது எப்படி..?
- டி.கண்ணிகாஸ்ரீ, யமுனை தெரு.
ஞானகுரு :
இந்த கதையை ஒருசிலர் கேள்விப்பட்டிருக்கலாம். கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாக சண்டைக்குப் போனான். ’உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது…’ என்றான். உடனே கடவுள், ‘சரி, இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்’ என்று வரம் கொடுத்துவிட்டார்.
உடனே விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவத்தில் விவசாயி சொன்ன நேரத்தில் மழை பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தவன் அதிர்ந்துபோனான். ஏனென்றால், உள்ளே தானியம் முழையாக இல்லை, பதராக இருந்தது. பெரும்பாலான கதிர் அப்படியே இருந்தது. உடனே கோபத்தோடு கடவுளை அழைத்து, ‘மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன். ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டது ஏன்..?’ என்று கேட்டான்.
அதற்கு கடவுள், ‘என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்கத்தெரியவில்லை!” என்றார்.
ஆம். இதுதான் வாழ்க்கை. இடையூறுகள், பிரச்னைகள் வரும் நேரத்தில்தான், மனிதர்கள் தங்கள் திறமையை அதிகரித்துக்கொள்கிறார்கள். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது. பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை கொடுமையானது. எதிர்பாராத திருப்பங்கள்தான் வாழ்க்கையைச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுகிறது. இடையூறுகளைக் கண்டு அஞ்சாமல் வரவேற்கக் கற்றுக்கொண்டாலே போதும், அந்த இடையூறு காணாமல் போய்விடும்.












