• Home
  • அரசியல்
  • திருச்சி சூர்யாவின் முக்குலத்தோர் மோதல் படை

திருச்சி சூர்யாவின் முக்குலத்தோர் மோதல் படை

Image

தினம் ஒரு திருவிளையாடல்

தமிழக பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தினம் ஒரு அணுகுண்டு வீசிக்கொண்டு இருக்கிறார். இப்போது பா.ஜ.க.வினால் முக்குலத்தோர் திட்டமிட்டு பாதிக்கப்பட்டதாகச் சொல்லி ஆலோசனைக் கூட்டத்திற்கு நாள் குறித்தது படு சர்ச்சையாகியுள்ளது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், ‘அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும். அதிகபட்சம் அமார் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே…எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்று பதிவு போட்டு சண்டையைத் தொடக்கியிருந்தார்.

அவர் இப்போது, ‘முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மாவட்ட, மண்டல, ஒன்றியத்தில் உள்ளடக்கிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பிஜேபியால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைத்து மாபெரும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்’ என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.

பா.ஜ.க.வினால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் என்று இ.எம்.டி.கதிரவன், டாக்டர் சரவணன், ஆர்.கே.சுரேஷ், நிர்மல்குமார், சரவணன் ஐ.ஆர்.எஸ்., சுரேஷ்குமார், சேதுபதி, பண்ணை இளங்கோ ஆகியோர் பெயருடன் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

அதேநேரம் கள்ளச்சாராய மரணத்துக்குப் போராட்டம் நடத்தும் அண்ணாமலையையும்  விட்டு வைக்கவில்லை. அவர், ‘கள்ளச்சாராய மரணத்தை பொறுத்தவரை மோடி ஆட்சி செய்த காலத்தில் 2009ல் கள்ளச்சாராய சாவு மட்டும் 139, அதன் பிறகு குஜராத்தில் 2016ல் 16 பேர், 2019ல் 20 பேர், 2022ல் 42 பேர் என கள்ளச்சாராயத்தால் குஜராத்தில் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த செய்திகளை வைத்து, நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இது போன்ற மரணங்கள் நடந்திருக்கின்றன இணைந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அண்ணாமலை பேசவில்லை. மாறாக, தமிழ்நாட்டில் ஏதாவது அரசியல் லாபம் பார்க்க முடியுமா என்பதை தவிர, அண்ணாமலைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

சமீபத்தில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஓரு 9 வயது குழந்தை காமுகர்கள் கொடூரமாக கற்பழித்து கொன்று சாக்கடையில் வீசிச்சென்றார்கள். குற்றவாளியில் ஒருவன் கஞ்சா குடிக்கிகள் என்பது கூடுதல் தகவல். அதை பற்றி அண்ணாமலை அவர்கள் எதுவும் பேசவில்லை. ஒரு இரங்கல் பதிவு கூட இல்லை. ஏன் என்றால் பாஜக – கூட்டணி ஆளும் மாநிலம்? இது பச்சையான சந்தர்ப்பவாதம் இல்லையா?’  என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆட்டம் சூடு பிடிக்கிறது.

Leave a Comment