• Home
  • யாக்கை
  • பிறவிக் குறைபாட்டுக்கும் சிகிச்சை

பிறவிக் குறைபாட்டுக்கும் சிகிச்சை

Image

இயன்முறை மருத்துவம்

மருத்துவ உலகம் நாள்தோறும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. எத்தனையோ நாட்பட்ட நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது, பிசியோதெரபி என்னும் இயன்முறை மருத்துவம்.

 உடலியக்கச் செயல்பாட்டை விஞ்ஞானரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடுகளைப் போக்கும் நவீன மருத்துவ வடிவமே இந்த இயன்முறை மருத்துவம். வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதே இதன் சிறப்பு அம்சம் ஆகும். அதாவது, இயற்கையாக உடற்பயிற்சியின் மூலம் உடலை பக்குவப்படுத்தும் மருத்துவ முறையாகும். இது உடல் இயக்கத்தை முறைப்படுத்தும், மருத்துவத் துறையாகும்.

இன்றைய உலகில் ஆரோக்கியமான உடல்திறனுடன் இருக்கவும், உடல்பருமன் மேம்பாட்டை தக்கவைத்துக்கொள்ளவும், அறுவைசிகிச்சைகளுக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் இயன்முறை மருத்துவம் மிக அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.  இதைக் கருத்தில்கொண்டுதான், உலக சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் மக்களுக்கு ஓர் இயன்முறை மருத்துவர் இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், ஆனால், தமிழகத்தின் மக்கள்தொகையில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு இடத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு இயன்முறை மருத்துவர்கூட இல்லை என்பது நிஜம்.


ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும்போது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும். அப்போது இயன்முறை மருத்துவம்தான் உடற்பயிற்சி மூலம் உடலை இயக்க நிலைக்குக் கொண்டுவந்து அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க துணை செய்கிறது. பெரும்பாலானோர் மூட்டுவலி, கழுத்துவலி, முதுகு வலி, ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 75 சதவீதம் பேர் இயன்முறை மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்னைகள், முடக்குவாதத்தால் வரும் தொந்தரவுகள் உள்பட எல்லா நாட்பட்ட வலிகளுக்கும் அறுவவைசிகிச்சையே தீர்வு என்பது ஒரு தவறான அபிப்ராயம். இதுபோன்ற பிரச்னைகளில் பலவற்றை எளிமையான பிசியோதெரபி சிகிச்சையாலும் சில தொடர்ச்சியான உடற்பயிற்சிகளாலும் சரி செய்துவிடலாம் என்கின்றனர், அதனைச் சார்ந்திருக்கும் மருத்துவர்கள்.


பிறக்கும்போதே சில குழந்தைகள்  ஊனமாகப் பிறக்கின்றனர் மற்றும் கை, கால் மடிந்து அல்லது பிறந்தபிறகு கீழே விழுந்து பாதிப்படைகின்றனர்.  அப்போது, அதனை மருந்தால் சரிசெய்ய இயலாது. ஆனால், இயன்முறை மருத்துவத்தால் அதைச் சரி செய்ய முடியும். விபத்தால் சிலர் கை, கால் மற்றும் எலும்பு முறிவுகளை அடைகின்றனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இயங்கவைக்க பிசியோதெரபி முறையைப் பயன்படுத்துகின்றனர்.

மருந்துகள் இன்றி மருத்துவம் பயன்படுத்தும் ஒரே மருத்துவம் இயன்முறை மருத்துவம் மட்டுமே. உடல்பருமனை உடற்பயிற்சி மூலமே சுலபமாக குறைக்க முடியும். அன்றாட செய்யும் உடற்பயிற்சியால் உடல் எடை மற்றும் மூட்டுவலி இருதய பிரச்னை அனைத்தும் சரிசெய்ய இயன்முறை மருத்துவம் பெரிதும் உதவுகிறது. நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படும் நிலையில், பிசியோதெரபி மருத்துவத்தின் பங்கு, என்றும் மருத்துவத் துறையில் முக்கிய இடம் வகிக்கிறது.


இயன்முறை மருத்துவம் உடல் வலி மற்றும் நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்து, அனைத்து வயதினரும் தத்தமது உடலை பராமரிக்க உதவுகிறது. பாதிப்படைந்தோர், மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படவும், அவர்களது பணியில் மீண்டும் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது. பலதரப்பட்ட உடலியக்க பிரச்னைகளுக்கு, இயன்முறை சிகிச்சை மூலம், நல்ல பலனைப் பெறலாம். முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நீண்டகால தொந்தரவுகளுக்கும், நிவாரணம் பெற முடியும்.
இதுதவிர, நரம்பியல், இதயவியல் துறைகளிலும், இந்த மருத்துவம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் பிரசவத்திற்கு முன்பும்பின்பும் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம், பெண்களின் உடல் எடை மற்றும் அவர்களின் உடல் அமைப்பு பராமரிக்கப்படுகிறது. பொதுவாக விளையாட்டு வீரர்கள் இதன் மூலம் நல்ல பலனை பெறலாம். வாதநோய்களுக்கு இந்த மருத்துவம் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. குறிப்பாக, இயன்முறை சிகிச்சை மூலம் முகத் தசைகளைத் தூண்டி, அதன் இயக்கத்தை சீர்செய்ய முடியும். மேலும், பயிற்சிகள் மூலம் முகத் தசைகளுக்கு வலிமையூட்டுதல், தசை அசைவிற்கான கட்டுப்பாடுகளை கூட்டுதல், கண் அசைவை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்ய முடியும். மேலும் கண் மற்றும் வாய் அசைவிற்கான உடற்பயிற்சிகள், பேச்சுப் பயிற்சிகளையும் அளிக்க முடியும்.

Leave a Comment