நெகிழவைக்கும் குட்டிக் கவிதைகள்

Image

கவித்துவம்

சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்

ஞானம்

நான் செய்வதை

ஒரு குழந்தை பார்க்கும்போது

பதற்றமடைகிறேன்

என்று ஒரு நாள் கண்டுபிடித்தேன்.

ஒரு குழந்தை பார்க்கும்போது

அசவுகர்யம் அடைகிற எதையும்

நாம் செய்யக்கூடாது என்று

இன்னொரு நாள் கண்டுபிடித்தேன்.

அவ்வளவுதான் விஷயம்

அவ்வளவுதான் ஞானம்.

  • போகன்

ரசனை

வானம் பார்ப்பதும்

கடல் பார்ப்பதும்

யானை பார்ப்பதும்

ரயில் பார்ப்பதும்

காணாமல் போனது

பிழைப்பைப் பார்ப்பதில்

  • மானா பாஸ்கரன்

எண்ணம்

துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும்,

சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் ,

எதிரெதிர் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்

எப்போதும் போல் பெய்து கொண்டிருந்தது

மழை

 – ராஜாசந்திரசேகர்

Leave a Comment