தொட்டுத் தொட்டுப் பேசுங்கள்

Image

அன்பு பரவட்டும்

கடைசியாக யார் உங்கள் கையை ஆறுதலாகப் பற்றியது..? உங்களுக்கு நம்பிக்கையூட்டும் புன்னகையை பரிசாகக் கொடுத்தது யார்..?  நீங்கள் யாரிடம் வெளிப்படையாக அன்பை பரிமாற்றம் செய்தீர்கள்..?

நிறைய பேர் யோசிக்க வேண்டியிருக்கும். ஆம், அன்பு நம்மிடம் நிறையவே நிரம்பி வழிந்தாலும், பிறரிடம் அதை திறந்து காட்டுவதற்குத் தயங்குகிறோம். வாய் வார்த்தையாகப் பேசுவதற்கு சங்கடப்படுகிறோம்.

இதனால் எத்தனை அன்பை இழக்கிறோம் தெரியுமா..? வெளிப்படையாகப் பேசுங்கள். வார்த்தைகளால் பேச முடியவில்லை என்றால் கண்களால் பேசுங்கள், கைகளால் தொட்டுப் பேசுங்கள்.

ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டிய அன்பை, பாசத்தை, பிரியத்தை, நம்பிக்கையை ஒரே ஒரு அழுத்தமான தொடுதலில் பரிமாறிவிட முடியும். ஒரே ஓர் அணைப்பில் ஒட்டுமொத்த நேசத்தையும் காட்டிவிட முடியும். ஒரே ஒரு கனிவான பார்வை அல்லது புன்னகையில் முழு நம்பிக்கையும்  கொடுத்துவிட முடியும்.

சின்னக் குழந்தையை தூக்கிவைத்து கொஞ்சுவதற்கு, முத்தம் கொடுப்பதற்கு எல்லோருமே ஆசைப்படுகிறோம். அதனை ஒரு குறிப்பிட்ட வயதில் நிறுத்துவதுதான் தவறான அணுகுமுறை. எல்லா மனிதர்களும் எல்லா வயதிலும் மனப்பூர்வமான அன்புக்கும், அரவணைப்புக்கும் ஆசைப்படுகிறார்கள்.

அன்பு காட்டுவதில் ஒரு மாபெரும் நன்மை இருக்கிறது. ஆம், அதற்கு எந்த ஒரு செலவும் கிடையாது.  எனவே ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் சகலரும் கஞ்சத்தனமில்லாமல் அன்பை அள்ளி வழங்கலாம். மழையாகப் பொழியலாம். ஆனால், நீங்கள் கொடுக்கும் அன்புக்கு மட்டும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காதீர்கள். மழை யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. அதுபோல் அன்பை பொழியுங்கள். 

வீடுகளில் நாய், பூனை வளர்ப்பவர்களுக்குத் தெரியும். கொஞ்ச நேரம் உரிமையாளர் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினாலே,  அவை ஓடோடி பாய்ந்து உடல் மீது சாய்ந்து, தழுவி, புரண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தும். இப்படி அன்பு காட்டலாமா என்று விலங்குகள் தயங்குவதே இல்லை. அதுபோல் நீங்களும் காணும் மனிதர்களிடம் எல்லாம் அன்பை மழையாகப் பொழியுங்கள். இனிமையாகப் பேசுங்கள். நிறைய புன்னகை செய்யுங்கள்.   

எந்த நிபந்தைனையும் இல்லாமல் கொடுக்கப்படும் அன்பு போன்று உயர்ந்த தர்மம் உலகில் வேறு எதுவும் இல்லை. எனவே, கொடுத்துக்கொண்டே இருங்கள்.  

அதுவே மகிழ்ச்சி.   

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment