என்ன செய்தார் சைதை துரைசாமி – 286
பெருநகர சென்னை மேயராக பதவிக்கு வந்த சைதை துரைசாமிக்கு இருந்த மிகப்பெரிய சவால் என்றால் கழிவறை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், தினமும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்தியவர்கள் சென்னைக்கு வந்த பிறகும், பெரும்பாலும் அதே பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
சாலைகளின் ஓரங்களில், பஸ், ஆட்டோவுக்குப் பின்னே, மரங்களுக்குப் பின்னே என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ, அவற்றை எல்லாம் திறந்தவெளி கழிப்பறையாகப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலோர் இதற்காக குற்றவுணர்ச்சி கொள்வது அல்லது சங்கடப்படுவதும் இல்லை. அவசரத்துக்குப் போவதால் என்ன தப்பு என்றே நினைக்கிறார்கள். பஸ் நிறுத்தம், பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன்கள் மட்டுமின்றி மார்க்கெட், கோயில் என்று அதிகம் மக்கள் புழங்கும் இடங்களில் எல்லாமே இந்த பிரச்னை ரொம்பவே அதிகம். பொது இடத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு வழிகள் இருந்தாலும், அது பெரும்பாலும் நடைமுறைக்கு சரிப்பட்டு வருவதில்லை. அதனாலே பலரும் தைரியமாக பொது இடத்தை கழிவறையாகப் பயன்படுத்துகிறார்கள்.
குழந்தைகள் எந்த இடத்தை வேண்டுமானாலும் கழிவறையாகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணமே பெரும்பாலான பெற்றோருக்கு இருக்கிறது. ஆண்கள் எல்லா இடங்களையும் கழிவறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நேரத்தில், பெண்கள் நிலை ரொம்பவும் பரிதாபம். வேலை நிமித்தம் வெளியே வருபவர்கள், பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். ஏனென்றால் பொதுக் கழிவறைகள் எண்ணிக்கையில் மிக மிக குறைவு. அப்படி இருக்கும் கழிவறைகளும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதில்லை. எனவே, உள்ளே போனாலே குமட்டிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகவே இருந்தது.
மேயர் சைதை துரைசாமி பதவிக்கு வந்ததும் பொதுக்கழிவறை விஷயங்களில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்வதற்கு விரும்பினார். பொது இடங்களில் மக்கள் அசுத்தம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
- நாளை பார்க்கலாம்.