கவர்னர் ரொம்ப பிஸி
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. பிரிந்த பிறகு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை யாரும் பெரிதாக கண்டுகொள்வதே இல்லை. இந்த நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக வரிசையாக கவர்னரை சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்று கவர்னரை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘’தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, இன்றைய தினம், மூத்த தலைவர்களுடன் இணைந்து, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் ரவி அவர்களைச் சந்தித்தோம்.
மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் திரு ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.’’ என்று கூறியிருக்கிறார்.
இன்று தமிழகம் முழுக்க கள்ளச்சாராயத்து எதிராக போராட்டம் நடத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் நாளை கவர்னரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறார். மீண்டும் அனைத்துக் கட்சியினரும் தன்னை சந்திக்க வருவது கண்டு கவர்னருக்கு ரொம்பவே மகிழ்ச்சியாம்.