• Home
  • ஞானகுரு
  • புலி வேட்டைத் தத்துவம் – பார்வையில் இருக்கிறது பாதை

புலி வேட்டைத் தத்துவம் – பார்வையில் இருக்கிறது பாதை

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : பல தொழில் செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்வியே கிடைக்கிறது.  நான் என்ன தான் செய்வது?

  • ஏ.ஆர்.கார்த்தி, தேவகோட்டை

ஞானகுரு :

புலி வேட்டையாடுவதைக் கவனித்திருக்கிறாயா? நூறு மான்கள் திரிந்தாலும் ஏதாவது ஒரு மானை மட்டுமே குறிவைக்கும். அந்த மான் எத்தனை தூரம் ஓடினாலும், எத்தனை வேகமாக ஓடினாலும் அதன் பின் மட்டுமே ஓடும். அந்தப் புலியின் பாதையில் வேறு மான்கள் குறுக்கேவந்தாலும் தன் பார்வையையும் பாதையையும் மாற்றிக்கொள்ளாது. அத்தனை தீவிரமாக ஒருமுகத்துடன் விரட்டினால்தான் வயிற்றுக்கு உணவு கிடைக்கும்.

நீ தோல்வியைக் கண்டு பயந்து தொழிலை மாற்றினால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா? ஒவ்வொரு தோல்வியும் உனக்கு விலைமதிக்க முடியாத அனுபவத்தைக் கற்றுக்கொடுத்திருக்கும். அந்த தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடி. அவற்றை வெற்றிகொள்ளும் வழியை ஆராய்ந்துபார். மீண்டும் அதே தொழிலில் முழு ஈடுபாட்டுடன் இறங்கு. தோல்வி என்பது கற்றுக்கொள்வது. வெற்றி என்பது பெற்றுக்கொள்வது. கற்றுக்கொண்டவரால்தான் பெற்றுக்கொள்ள முடியும். 

கேள்வி : அறிவு அல்லது ஆற்றல் இருந்தால் தானே  வாழ்வில் வெற்றிபெற முடியும்..?

  • ஏ.குட்டி, அழகாபுரி.

ஞானகுரு :

அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. அதே போல் ஆற்றலுக்கும் வெற்றிக்கும் தொடர்பு இல்லை. வாழ்வின் வெற்றிக்குத் தேவை தெளிவான குறிக்கோள். அதனை அடைவதற்கு கடுமையான முயற்சி. வெற்றி கிடைக்கும் வரை பொறுமையோடு காத்திருக்கும் வலிமை. இந்த மூன்றுக்கும் மேலாக அறிவும் ஆற்றலும் இருந்தால் நல்லது. இவை இல்லையென்றாலும் உன் முயற்சியால் அவை தானே வந்துசேரும்.

Leave a Comment