போட்டிக்குத் தயாராகுங்கள்
ஊரில் லட்சக்கணக்கான நபர்கள் புதிய கார் வாங்குகிறார்கள். அவர்களை யாரும் போட்டியாளராகக் கருதுவதில்லை. யார் யாரோ பங்களா கட்டினாலும் மக்கள் கவலைப்படுவதில்லை. ஊரில் சுற்றுலாபயணிகள் யாரைப் பார்த்தாலும் பொறாமை கொள்வதில்லை.

ஆனால், உறவினர்கள், நண்பர்கள், பக்கத்துவீட்டுக்கார்களை போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். அவர்களை விட கொஞ்சமாவது சிறப்பாக வாழ வேண்டும் என்று சபதம் செய்கிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரர் செடி வளர்த்தால், இவர்களும் வளர்க்கிறார்கள். உறவினர் காசிக்கு போனால் இவர்களும் போகிறார்கள். நண்பர் பழைய வண்டியை மாற்றிவிட்டு புதியது வாங்கினால், தாங்களும் அப்படி வாங்கத் துடிக்கிறார்கள். பிள்ளை முதல் மதிப்பெண் வாங்கும் அவசியமில்லை, பக்கத்துவீட்டுப் பையனை விட இரண்டு மதிப்பெண் கூடுதலாக வாங்கினால் போதும்.
சாலை பயணத்தில் சிலர் முந்திக்கொண்டு செல்வார்கள். அவரை முந்த வேண்டும் என்று போட்டியிடும்போது, உங்கள் பயண வேகத்தை அவர் தீர்மானித்துவிடுகிறார். அப்படித்தான் அடுத்தவர்களைப் பார்த்து, அவர்களைப் போன்று வாழ்வதற்கு ஆசைப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். அடுத்தவர் போன்று வாழ்வது தான் மகிழ்ச்சி என்று நினைக்கிறார்கள்.
வாழ்க்கையில் நிறைய பேர் வருவார்கள், செல்வார்கள். அவர்களை போட்டியாளராக நினைத்தால் நம் மகிழ்ச்சி பறி போய்விடும். அடுத்தவர் வாழ்க்கையில் கவனம் வைக்காமல் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே போதும். யாரையும் போட்டியாராக நினைக்க வேண்டாம். நம்மைப் போன்று அடுத்தவர் வாழ வேண்டும் என்றும் நினைக்க வேண்டாம்.
எனவே, போட்டியிடுவது என்றால் உங்களுடனே நீங்கள் போட்டியிடுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்காக போட்டியிடுங்கள். உங்கள் லட்சியத்துக்காகப் போட்டியிடுங்கள். குடும்ப ஒற்றுமைக்காகப் போட்டியிடுங்கள். இதுவே மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு கவுன்சிலிங்