டைட்டில் சர்ச்சை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி இன்றும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் கருணாநிதி எழுதிய பகுத்தறிவு வசனங்கள். இன்றும் பேச்சுப்போட்டிகளில் அந்த வசனங்கள் பேசப்படுகின்றன.
இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு பராசக்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தலைப்பு வைத்திருக்கும் ஏவிஎம் நிறுவனம் எந்த சிக்கலும் ஏற்படுத்தவில்லை என்றாலும் கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் இழுக்கு என்று கொதிக்கிறார்கள்.
இந்த நிலையில் படக்குழுவினர் இந்த படத்தின் கதை என்னவென்று தெரிந்தால் அனைவரும் பராசக்தி என்ற பெயருக்கு காரணத்தைப் புரிந்துகொள்வார்கள். கலைஞர் குடும்பத்தினர் இதை எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால், இந்த படத்தின் கதைக்கும் கருணாநிதி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது.
அதாவது 1965ம் ஆண்டு இந்தியை ஆட்சி மொழியாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பக்தவத்சலம் அரசு மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கியது. இந்த இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார் பழுவூரைச் சேர்ந்த சின்னச்சாமி. இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் துறையைக் கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சனவரி 27 அன்று பேரணி நடத்தினர்.
காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தோளில் குண்டடிபட்ட நெடுமாறன் ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். இராசேந்திரன் நெற்றியில் துப்பாக்கி குண்டு துளைத்ததால் அதே இடத்திலேயே விழுந்தார். தற்போது இராசேந்திரன் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து தோராயமாக 100 அடி தூரத்தில் ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் கீழேதான் குண்டடிபட்டு ராசேந்திரன் விழுந்து கிடந்தார். மொழிப்போர் களத்தில் உயிர்நீத்த இராசேந்திரனின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. 1969 இல் இராசேந்திரனின் ஈகத்தை பறைசாற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வாயிலில் அன்றைய முதல்வர் கலைஞரால் நிறுவப்பட்டது.
அந்த இளைஞரின் கதை என்பதால் பராசக்தி என்ற பெயர் நியாயம் என்கிறார்கள்.