நான் எனும் அகங்காரம்
ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன், ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். என் அளவுக்கு புத்திசாலித்தனம் கிடையாது. ஆனால், அவருக்கு கம்பெனியில கார் கொடுத்திருக்காங்க. அவங்க முதலாளிக்கு ஜால்ரா போட்டு காக்கா பிடிச்சு கார் வாங்கிட்டாரு. என்னை மாதிரி சின்சியரா வேலை பார்க்கிற ஆளுங்களுக்கு யாரும் மதிப்பு தர்றதே இல்லை..’ என்று புலம்பினார்.
‘’உன்னிடம் இருக்கும் வியாதி குணமானால் மட்டுமே உன்னால் உண்மையைப் பார்க்க முடியும்’’ என்றார் ஞானகுரு.
‘’எனக்கு எந்த வியாதியும் இல்லையே… நான் நன்றாக இருக்கேன்’’ என்றார் மகேந்திரன்.
‘’உனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான மனிதர்களிடம், ‘தான்’ என்ற அகந்தை வியாதி இருக்கிறது. மற்றவர்களை விட தான் உயர்ந்தவன், தான் சிறந்தவன், தான் அறிவாளி என்றும் தனக்கு மட்டும் சரியான வாய்ப்பும் மதிப்பும் கிடைக்கவில்லை என்றும் நினைக்கிறார்கள். தன்னை மட்டுமே திறமைசாலி என்று நம்புபவர்களுக்கு, மற்றவர்களிடம் இருக்கும் திறமை, புத்திசாலித்தனம் ஒருபோதும் கண்ணுக்குத் தெரியாது.
அதனால் பிறரது வெற்றியை மட்டுமல்ல, தோல்வியையும் கிண்டல் செய்வார்கள். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படி செய்து பிரச்னையை தீர்த்திருப்பேன், ஜெயித்திருப்பேன்’ என்றெல்லாம் பெருமை பேசுவார்கள். தன்னை உயர்ந்தவர் என்ற எண்ணம் வியாதியாக வளர்ந்து நிற்பதாலே உனக்கும் இப்படி பேசத் தோன்றுகிறது…’’
கொஞ்சநேரம் அமைதியாக இருந்த மகேந்திரன். ‘’உண்மை தான். எனக்கு அவரது முதலாளி பற்றியும் அவரது திறமையும் தெரியாது என்றாலும் ஆற்றாமையில் இப்படி பேசத் தோணுகிறது. இப்படி எண்ணம் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்..’’
‘’மைத்துனர் கார் வாங்கியிருக்கிறார் அதற்காக மகிழ்ச்சி அடைவதற்குக் கற்றுக்கொள். அது எப்படி வந்திருக்கும், ஏன் உனக்கு வரவில்லை என்றெல்லாம் யோசிக்காதே. அவர் வைத்திருப்பதால் நீயும் கண்டிப்பாக கார் வாங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவருக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, உனக்குக் கிடைக்கவில்லை, அவ்வளவு தான்.
இங்கு யாரும் யாரையும் விட உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை புரிந்துகொண்டால், எல்லாம் சரியாகிவிடும்…’’ என்றார் ஞானகுரு.
மகிழ்ச்சியுடன் திரும்பிப்போனார் மகேந்திரன்.