இத்தனை குழப்பத்துக்குக் காரணம் ஆதவ் அர்ஜூனா..?
தி.மு.க. கூட்டணியில் ஸ்டாலினுடன் நல்ல நட்புடன் இருந்த திருமாவளவன் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் சீட்டுக்கு ஆசைப்பட்டு தொடங்கிய நாடகம், அவருக்கே எதிராக முடிந்திருக்கிறது. வரும் தேர்தலில் 6 சீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் அவரது நடவடிக்கைக்கு தி.மு.க.வினர் தொடங்கி பா.ம.க. வரை எதிர்ப்பலை கிளம்பியிருக்கிறது.
இன்றைய உலகில் மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை என்பதாலே கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் மதுவிலக்குக் கொள்கையை தூக்கிப் போட்டுவிட்டது. அப்போது கூட்டணியில் அமைதியாக இருந்த திருமா திடுமென மதுவிலக்கு மாநாடு என்று அறிவித்தது மட்டுமின்றி, அதற்கு அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரம் வில்லங்கமானது என்றாலும் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி ஸ்டாலினே முடித்துவைத்தார்.
ஆனாலும் திருமாவளவன் அடுத்ததாக ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று முன்பு போட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இந்த விவகாரத்துக்கு தி.மு.க. நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்ததும் உடனே அந்தப் பதிவை நீக்கியதும் இல்லாமல் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தப்பித்து ஓடினார். அதன்பிறகு விடுதலை சிறுத்தைகள் வீரம் இவ்வளவுதானா, தி.மு.க.வுக்கு பயந்து அட்மின் டெலிட் செய்துவிட்டார் என்று சொல்வது தான் திருமாவின் வீரமா என்று சிலர் கேட்டதும் அவரே மீண்டும் பதிவு போட்டார்.
இந்த விஷயத்துக்கு எதிர்பாராத வகையில் அ.தி.மு.க.வில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது. ஒருபோதும் அ.தி.மு.க.வில் ஆட்சியில் பங்கு கிடையாது என்று உறுதிபடத்தெரிவிக்கப்பட்டது. அதோடு அ.தி.மு.க. அலுவலகத்திற்கு நேரடியாக வந்து அழைத்தால் மட்டுமே மாநாட்டில் பங்கேற்பது குறித்து யோசிக்கப்படும் என்று மதுவிலக்கு மாநாட்டுக்கும் கேட் போட்டுவிட்டார்கள்.
இந்த நிலையில், ஆட்சியில் பங்கு கேட்பதில் எந்த தப்பும் இல்லையே, அதை ஏன் அழிக்க வேண்டும் என்று சீமானே அவமானப்படுத்தத் தொடங்கவே, அவரது கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் வைத்தார்கள். இது பத்தாது என்று, ‘மதுவிலக்கு குறித்து பேசுவதற்கு பா.ம.க.வுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. எங்கள் கட்சியை சாதிக் கட்சி என்று விமர்சனம் செய்வதை திருமா நிறுத்திக்கொள்ளவில்லை என்றால்.?’ என்று அன்புமணி கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்சியின் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறார். இதற்குக் காரணம் விசிகவுக்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜூன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கடும் ஆவேசத்தில் இருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணியில் நாலு சீட்டு வாங்குவதற்கே திருமா தலைகீழாக தண்ணி குடிக்க வேண்டும் போலிருக்கிறது.
திருமாவில் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. தோழர்கள் யாரும் வாயைக் கூட திறக்கவில்லை. பரிதாபம் தான்.