• Home
  • சக்சஸ்
  • பாம்புக்கு பால் ஊற்றுவார்கள், சக மனிதனுக்கு தண்ணீர் தர மறுப்பார்கள்

பாம்புக்கு பால் ஊற்றுவார்கள், சக மனிதனுக்கு தண்ணீர் தர மறுப்பார்கள்

Image

இந்து மதம் பற்றி அம்பேத்கர்

இந்த உலகில் தனி மனிதராக அதிக சிலைகள் புத்தருக்கு இருப்பதாகச் சொல்வதுண்டு. அது, ஆன்மிக வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தலைவராக, தனி மனிதராக ஒருவருக்கு அதிக சிலைகள் என்றால் அது அம்பேத்கருக்கு மட்டுமே இருக்கிறது.

அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளாகவே கொண்டாடினார்கள். அதற்கு அவருக்கு மகர் மக்களின் தலைவர் என்று ஒரு பட்டம் கொடுக்க முன்வந்தனர். அதாவது, ஒட்டுமொத்த தீண்டப்படாதோரின் தலைவர் என்று அர்த்தம். இதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா..?

‘’நீங்கள் அளித்த பட்டத்துக்கு நன்றி. இப்பட்டயம் முழுவதிலும் எனது பண்புகளையும் பணிகளையும் பற்றிய உயர் நவிற்சிகள் பல நிறைந்துள்ளன. எளிய மனிதனாகிய என்னைக் கடவுளாக்க முயல்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது. தனிமனிதனைக் கடவுளாக்குவது, துதிபாடுவது என்பதெல்லாம் உங்கள் விடுதலைக்கும் பாதுகாப்புக்கும் தனியொரு மனிதரை எப்போதுமே சார்ந்து இருப்பதைத்தான் காட்டுகிறது.

வறுமை, அறியாமை, ஏழ்மையை அகற்றிக்கொள்வதற்காக உங்கள் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்ததையே நீங்களும் செய்கிறீர்கள். அவர்களின் புனிதப் பயணங்கள், சமயநூல்கள் எல்லாம் கடவுள் அவதரித்துக் காப்பாற்றுவார் என எண்ணி எண்ணிக் காலங்காலமாய் மூடநம்பிக்கையில் உழல்கின்றனர். இருப்பினும், உங்கள் முன்னோர் போன்றே நீங்கள் கட்டுவதும் கந்தல்தானே !

வேதங்களை நம்புகிறவனே இந்து என்கிறார்கள். வேதத்தை நாங்கள் நம்பவேண்டும். ஆனால், தெரிந்துகொள்ளக்கூடாது. எறும்புக்குச் சர்க்கரை போடுகிறவர்கள், பாம்புக்குப் பாலும் முட்டையும் கொடுப்பார்கள். ஆனால், தாகத்தால் தவிக்கும் சகமனிதனுக்குக் குடிக்கத் தண்ணீர் தரமறுப்பார்கள். இத்தகைய கேவலமான எண்ணத்தைப் போதிக்கும் மதம், எப்படி என் மதமாக இருக்கமுடியும்? எனவேதான் சொல்கிறேன் இந்து மதம் உயர்சாதி மக்களின் சொர்க்கம்; தாழ்ந்த ஜாதி மக்களின் நரகம்!” செல்வம் இல்லாதவர் உண்மையில் ஏழையல்ல. ஒருநாள், அவர் செல்வந்தனாகக் கூடும். ஆனால், கல்வியறிவு இல்லாதவர்கள் எல்லாவிதத்திலும் ஏழைதான். எனவேதான், தன் மக்கள் கல்வி கற்கவேண்டும்’ என்று கூறி புரட்சியை எழுப்பினார்.

Leave a Comment