மனம் விட்டுப் பேசுங்கள்
‘மனம் விட்டுப் பேசுங்கள். அன்பு பெருகும்’ என்றார் அன்னை தெரசா. ஆனால், பேசுவதற்கு வாய்ப்பு உருவாக்கிக்கொள்ளாத காரணத்தாலே, நிறைய குடும்பங்களில் சிறு பிரச்னைகள்கூட பூதாகாரமாய் வளர்ந்து, குடும்ப அமைதியை சீர்குலைத்துவிடுகிறது. இதற்கு உதாரணமாய் வியட்நாம் கதை ஒன்றைச் சொல்லலாம்.
இளம்பெண்ணைக் காதலித்து மணந்த ராணுவ வீரன் ஒருவன், கொஞ்ச நாட்களிலேயே போருக்குச் செல்கிறான். அந்த சமயத்தில் அவனுடைய மனைவி கர்ப்பிணியாக இருப்பதால், மனவருத்தத்துடன் பிரிந்துசெல்கிறான். ஏனென்றால், போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லை அல்லவா? ஆனாலும், அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வீடு திரும்புகிறான். மனைவியையும் மகனையும் கட்டியணைத்து ஆனந்தம்கொள்கிறான்.
பின், கணவனுக்குப் பிடித்த சமையல் செய்வதற்காக, சாமான்கள் வாங்க, கடைக்குச் செல்கிறாள் மனைவி. அப்போது ராணுவ வீரன், மகனைப் பார்த்து, ‘அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்’ என்கிறார். அதற்கு அவன், ‘நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை’ என்கிறான். அதைக் கேட்டதும் அவன் அதிர்ச்சியடைகிறான். என்றாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், ‘பின் யார் உன் அப்பா’ என வீரன் கேட்கிறான்.
அதற்கு மகன், ‘தினமும் என் அம்மா நிற்கும்போது நிற்பார். அம்மா உட்காரும்போது அவரும் உட்கார்வார். படுக்கும்போது அவரும்கூடப் படுத்துக்கொள்வார். அவர்தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்’ என்கிறான். இதைக் கேட்டதும் வீரன் இன்னும் அதிர்ச்சியடைகிறான்.
அதனால், மனைவிமீது சந்தேகப்பட்டு அவள் சமைத்த உணவை உண்ணவில்லை. அவளுடன் நெருங்கவில்லை. கணவன் சந்தேகப்படுவதை அறிந்த மனைவி, அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறாள். அவள் இறந்த அன்று இரவு, தந்தையும் மகனும் படுக்கின்றனர். அப்போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன், ‘இதோ என் அப்பா’ என்கிறான். அதாவது மகன், தந்தை அருகில் இல்லாத குறையை உணரக்கூடாது என்பதற்காக, தன்னுடைய நிழலைக் காண்பித்து, ’இதுதான் உன் தந்தை’ என்று சொல்லி வளர்த்திருக்கிறாள், தாய். இந்த உண்மை தெரியாத வீரன், குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.
இந்தக் கதையில் இருவருமே வெளிப்படையாக மனம்விட்டுப் பேசாததால், அவர்களது வாழ்க்கை சிதைந்துபோனது. ஆதலால், மனம்விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக்கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்துவிடும். அதன் காரணமாக, அந்த உறவுகளில் விரிசல் விழும்; நட்புகள் துண்டிக்கப்படும்.
ஆகையால், வாழ்க்கையில் பிரச்னைகள் தோன்றும்போது, சம்பந்தப்பட்டவர்கள் சிறிதுநேரம் மனம்விட்டுப் பேசினாலே போதும், தீர்வு கிடைத்துவிடும். குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது என்று புரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், தாங்கள் வாழ்ந்த சூழலும் பிள்ளைகள் இப்போது வாழும் சூழலும் வெவ்வேறு என்பதை உணர வேண்டும். அதனால், இரு தரப்பினரும் நிறைய நிறைய பேசினால் மட்டுமே பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் கண்டறிய முடியும்.
மன அழுத்தம், சோர்வு, பதற்றம் ஆகிய பிரச்சினைகளை பகிர்ந்துகொள்வதன் மூலம், அவற்றை சுலபமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை உண்டாகும். இன்பத்தை பகிர்ந்துகொண்டால் அதிகரிக்கும், துன்பத்தை பகிர்ந்துகொண்டால் குறையும் என்று நம் முன்னோர் சரியாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால், மனதிலுள்ள சந்தேகம், வேதனை, பிரச்னைகளை மற்றவர்களிடம் வெளிப்படையாகப் பேசும்போது, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து சிக்கலில் இருந்து வெளியேற வழி பிறக்கும். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.
ராஜேந்திர சோழன், தன் தந்தை கட்டிய தஞ்சை பெரிய கோவிலை போலவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு பிரகதீஸ்வரர் கோவில் கட்ட எண்ணி அதற்கான வேலைகளில் ஈடுபட்டான். ஆனால், எவ்வளவோ முயற்சித்தும், விமானத்தை உயரே தூக்கி நிறுத்த முடியவில்லை. தலைமை சிற்பிக்கும் பிரச்னையைத் தீர்க்கும் வழி என்னவென்று புரியவில்லை. அந்த சமயம், திருவாரூரில் கமலாலயம் எனும் மிகப்பெரிய குளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார், வேறொரு சிற்பி. அவரும், பொங்கி வழிந்த நீர் ஊற்றுகளால் குளத்தை ஆழப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்து ஆலோசனை கேட்பதற்காக, கோயிலை கட்டிக்கொண்டிருந்த சிற்பியின் இடம் நோக்கிப் பயணித்தார். அதேசமயம், விமானத்தை உயர்த்த வழி தெரியாமல் தவித்த சிற்பியும், இவரிடம் ஆலோசனை பெற திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார். வழியில் சந்தித்துக்கொண்ட இருவரும், அவரவர் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசிக்கொண்டனர். அப்போது திருவாரூர் சிற்பி, ‘பஞ்சு பெருத்த இடத்துல, விமானத்துல கல்லை ஏத்தறதா கஷ்டம்’ என்று சொல்ல, சந்தோஷம் தாங்காத அவரும், ‘வாளை பெருத்த ஊர்ல, ஊத்துக்கண்ணை அடைக்கிறதா கஷ்டம்’ என்று ஆலோசனை வழங்க, இருவரது பிரச்னையும் முடிவுக்கு வந்தது.
அதன்படி, கமலாலயத்தில் பொங்கிய நீரில், வாளை மீன்களைவிட, அவை ஊற்றுக்கண்களை அடைத்துக்கொண்டன. அதன்பின் தண்ணீர் இறைக்கப்பட்டு திருப்பணி நடந்தேறியது. அதேபோல, பஞ்சுபொதிகளின் மூலம் சாரம் அமைத்து, விமானம் உயர்த்தப்பட்டது. இப்படி, இருவர் மனம்விட்டுப் பேசியதால், இரு பெரும் ஆலயங்களின் பிரச்னையே தீர்ந்திருக்கும்போது, நம்முடைய எளிய பிரச்னைகளுக்கு விடை கிடைக்காதா என்ன..?
மனம் விட்டுப் பேசுவோம், ஆனந்தமாக வாழுவோம்.