என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 76
டெங்கு நோய் பரவத் தொடங்கியதும், அந்த நோய் பற்றிய அச்சம் மக்களிடம் அதிகரித்தது. எனவே, உடனடியாக ஆங்கில மருத்துவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மேயர் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஆங்கில மருத்துவர்கள், ‘டெங்குக் காய்ச்சலுக்கு பிரத்யேகச் சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் போதும்’’ என்று தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் மருந்து இல்லை என்று சொல்லப்பட்டதைக் கேட்டு சைதை துரைசாமி அதிர்ச்சி அடைந்தார். மருத்துவமனைக்கு வந்தால் உயிரை காப்பாற்றிவிடலாம் என்று நம்பி வரும் மக்களுக்கு ஏதேனும் வகையில் தீர்வு கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
அந்த நேரத்தில் டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் ஒரு வாரத்தில் மரணம் அடைந்துவிடுவார்கள் என்று தமிழகமெங்கும் புரளி பரவியது. சாதாரண மருத்துவப் பரிசோதனை மூலம் டெங்கு கண்டறிய முடியாது என்பதால், வேறு காரணங்களால் மரணம் அடைவதற்கும், டெங்குதான் காரணம் என்று நினைத்து மக்கள் பயந்தனர். அதனால் மக்களிடம் டெங்கு பயத்தை குறைப்பதற்காக மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார். டெங்குவைத் தடுப்பதற்கு ஏராளமான பணியாளர்கள் களத்தில் செயல்படத் தொடங்கினார்கள்.
- நாளை பார்க்கலாம்.