ரோட்டை விட வீட்டுக்குள் விபத்துகள் அதிகம்

Image

எச்சரிக்கிறார் டாக்டர் அருண் கண்ணன், எலும்பியல் மருத்துவ நிபுணர்

தந்தை டாக்டர் கண்ணன் சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற மருத்துவர். சாமானிய மக்கள் முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் வரை மருத்துவம் பார்த்தவர். தாயார் ஜெயம் கண்ணன் சென்னையின் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர். இவர்களுடைய மகன் டாக்டர் அருண் கண்ணன். தனது கல்வித் தகுதி மூலம் எய்ம்ஸில் மருத்துவ இருக்கை பெற்று, மருத்துவக் கல்வி முடித்தவர். சுமார் 20 ஆண்டுகளாக எலும்பியல் துறையில் சென்னையின் முன்னணி ஆர்த்தோ மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அருண் கண்ணனை, அவர்  பணியாற்றும் சென்னை அப்பல்லோ பிரதான மருத்துவமனையில் சந்தித்துப் பேசினோம்.

உங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் பெரும்பாலும் காணப்படும் எலும்பு பிரச்சினை என்ன?

பொதுவாக இரண்டைக் கூறலாம் ஒன்று, எலும்புத் தேய்மானம் சார்ந்த பிரச்சினைகள், இன்னொன்று அடிபட்டு சேதம் அடைந்து வருவது.

எலும்புத் தேய்மானம் பிரச்சினை என்பது முதியவர்களுக்குத் தான் இயல்பாக வர வேண்டும் .ஆனால் இன்று வாழ்க்கை முறை மாறிப்போனதால் இப்போது இளம் வயதிலேயே வருகின்றன. அதனால் இது முதுமை மட்டுமல்ல உடல் பருமன் , உடற்பயிற்சியின்மை போன்றவற்றாலும் ஏற்படுகின்றது.

இன்னொரு விதமான எலும்புப் பிரச்சினை என்றால் விபத்துகளால் அடிபட்டு  வருவது. விபத்து என்கிற போது சாலை விபத்துகளில் குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகள்தான் அதிகமாக வருகின்றன. நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலும் கவனக்குறைவால்தான் இவை ஏற்படுகின்றன.

எலும்புத் தேய்மானம் எதனால் வருகிறது?

எலும்புத் தேய்மானம் என்பது ஒரு பொதுவான பிரச்சினை என்றாலும் பெரும்பாலும் முதியவர்களுக்குத்தான் வரும். இதனால் முழங்கால் மூட்டு வலி, கீழ் முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படுகின்றன. முதுமை அடையும் போது தலை முடி நரைப்பது போல் இந்த தேய்மானத்தைத் தவிர்க்க முடியாது. எனவே அதனை முழுமையாக மாற்றி பழைய இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. ஆனாலும், ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் சிகிச்சைகள் மூலம் அதிக தேய்மானம் ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும். தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டால் சிரமங்கள் வரும்.

இளம் வயது ,நடுத்தர வயதினருக்கு எடை கூடியதால் வரும் எலும்புத் தேய்மானத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதிக எடையால் வரும் இந்தத் தேய்மானத்திற்குப் பரம்பரை, உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்கள் இருக்கலாம்.

இன்று தொழில்நுட்பப் பணியில் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து 8 முதல் 10 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். அதனால் அவர்களின் உடலுக்கு உழைப்பு, பயிற்சி இல்லாமல் போய் விடுகிறது. அது மட்டுமல்லாமல் உட்கார்ந்து இருக்கும் நிலை கூட தவறாக இருக்கக்கூடும். இதனால் முதுகுவலி வருவது அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்டவர்கள் தரையில் அமரக்கூடாது, குத்துக்காலிட்டு உட்காரும்போது வலிக்கும் என்பதால் இந்தியன் ஸ்டைல் கழிப்பறை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எலும்புத் தேய்மானத்தினாலும் விபத்தில் அடிபட்டு ஜவ்வு பாதிக்கப்படுவதாலும் இது மாதிரி பிரச்சினை வருவதுண்டு. முழங்கால் மூட்டு, தோள்பட்டை, கணுக்கால் இணைப்பு போன்றவற்றில் இப்படிப் பிரச்சினைக்குரிய வலிகள் வரக்கூடும்.

குறிப்பாக பெண்களுக்கான எலும்பு பிரச்சினை என்ன?

பெண்களுக்கான பிரச்சினைகளில், ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. பொதுவாக  மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த பாதிப்பு வருகிறது. உடலுழைப்பு குறைந்து போனது, உடற்பயிற்சி இல்லாதது, மேலைநாட்டு ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் போன்ற பல காரணங்களால், இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

எலும்பு சார்ந்த பிரச்சினைகளில் உடல் பருமன் வகிக்கும் இடம் என்ன?

முதுமையால் வரும் தேய்மானத்தைப் போல அதிக உடல் எடை எலும்பை அழுத்துவதாலும் மூட்டுத் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி வருகிறது.

ஆர்த்தோ மருத்துவமனைகளில் நிறைய விபத்து கேஸ்கள் பார்க்க முடிவதற்கு  காரணம் என்ன?

விபத்துகளின் தலைநகரம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவிற்கு விபத்துகள் நடக்கின்றன. நம் நாட்டில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன .பெரும்பாலும் விபத்துகளுக்கு அதிக வேகம் என்று சொல்வார்கள். அதிக வேகம் ஆபத்து என்பதில் மறுப்பு சொல்ல முடியாது. ஆனால் சிறு கவனக்குறைவினால் பல விபத்துகள் நடக்கின்றன. அண்மையில், பெட்ரோல் போட்டுவிட்டு சைடு ஸ்டாண்ட் எடுக்காமல் வண்டி ஓட்டியதால்தான் விழுந்து அடிபட்டு ஒருவர் வந்தார். இப்படி சின்னச்சின்ன கவனக்குறைவினாலும் விபத்துகள் ஏற்படும்.

சாலையில் அதிவேகம் ஆபத்துதான் என்றாலும் 20 – 30 கிலோ மீட்டர் வேகத்தில் போகும்போதே பாதி விபத்துகள் நடக்கின்றன. கவனக் குறைவு பெரிய காரணமாக இருக்கும். எப்போதும் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்கக் கூடாது.

நம் நாட்டில் எலும்பு முறிவு பெரிய சதவீதம் என்றால் மேலை நாடுகளில் ஜவ்வு கிழிதல் 70% வரை ஏற்படுகிறது. இது நம்மூரில் 50 சதவீதம் வரை உள்ளது. நுண்துளை சிகிச்சை மூலம் அதை சரிப்படுத்தலாம். இடுப்பு எலும்பு தான் பெரிய பிரச்சினை ஆகும். இடுப்பு மூட்டுகளில் கட்டுப் போட முடியாது. எனவே பெரிய சிக்கலாக இருக்கும்.

சாலை விபத்துகளில் எப்படிப்பட்ட எலும்பு முறிவு ஏற்படுகின்றன?

சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவது தண்டுவடம் முறிவு அதிகம் நிகழ்கிறது. முழங்கால் மூட்டு அடிபடுவது, தோள்பட்டை ஜவ்வுகீழ்வது, கணுக்கால் இணைப்பு சேதமடைவது போன்றவையும் நேர்கின்றன.

அதே நேரம் எலும்பு முறிவுகளில் பாதி அளவிற்கு முதுமையினால் வீடுகளுக்குள் வழவழப்பான தரை வழுக்கியோ, சறுக்கியோ கீழே விழுவதால் ஏற்படுகின்றன. அதனால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதன் கணிசமான அளவு சதவீதத்தைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஆனால் அது தான் உண்மை.

வண்டி வாகனங்களில் செல்பவர்களுக்குத்தான் விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது 50 சதவிகிதம்தான். மீதமுள்ள 50 சதவிகிதம் வீட்டுக்குள் உள்ளவர்களுக்கு நடக்கிறது. விபத்துகள் சாலைகளில் மட்டுமல்ல வீட்டுக்குள்ளும் நடக்கின்றன. எனவே வீட்டில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முதியவர்கள் இருக்கும் வீட்டில் மெல்லிய இரவு விளக்கு கண்டிப்பாக எரிய விட வேண்டும். 70 வயது தாண்டியவர்களுக்கு ஊன்றுகோல் எனப்படும் வாக்கிங் ஸ்டிக் படுக்கை அருகிலேயே இருக்க வேண்டும். திடீரென்று படுக்கையை விட்டு எழும்போது தட்டுத் தடுமாறாமல் இருக்க அந்த விளக்கொளியும் ஸ்டிக்கும் உதவும்.

 எலும்பு எந்த வயது வரை வளரும் தன்மையுடன் இருக்கும் ?

எலும்பு வளர்ச்சிக்கு வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும் எலும்பு முறிவின் போதும் சேதமடைந்த போதும் இடைப்பட்ட எலும்பு வளர்ந்து ஒன்று சேர்ந்து விடும். அதன் குணமாகும் வேகம் வேண்டுமானால் கூடுதலாக குறைவாக இருக்கலாம். 90 வயது 100 வயதில் கூட உடைந்த எலும்பு ஒட்டிக் கொள்ளும். இதுதான் மனித உடலில் உள்ள பெரிய அற்புதம்.

எலும்பு வலுப்பெற என்ன செய்ய வேண்டும்?

எலும்பு பலவீனம் என்பது பார்வைக்குத் தெரியாது. அதற்கு எந்த வலி அறிகுறிகளும் இருக்காது. டெக்சா ஸ்கேன் (Dexa Scan) எனப்படும் எலும்பின் திண்மப் பரிசோதனையில் தான் இது தெரியும்.

நம் உடலில் எலும்பு வலுப்பெற நேராக அமர்தல் வேண்டும். தொடர்ந்து சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக நடைப் பயிற்சி, சிறு ஓட்டப் பயிற்சி மிகவும் நல்லது. கால்சியம் சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெள்ளை பொருட்களான பால், தயிர், நெய் போன்றவை கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருள்களாகும். சிக்கன் சாப்பிடலாம். மாலை சூரிய ஒளியில் நடக்கலாம். சூரிய ஒளியில் வைட்டமின் D சத்து உள்ளது. அது எலும்புக்கு மிகவும் நல்லது. மீன் உணவுகளில் கொழுப்புச் சத்து குறைவு என்பதால் அதை எடுத்துக் கொள்ளலாம். ஜிம் செல்லலாம், உடற்பயிற்சி நல்லது. மேலை நாடுகளில் சூரிய வெளிச்சம் படாததால் வைட்டமின்றி D-யைத் துணை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

எலும்பு பலவீனத்தின் அறிகுறி யாது?

எந்த வலியும் இராது என்பதால் பாதிப்புகள் உடனே தெரியாது. பலவீனம் அடைந்த பிறகுதான் தெரியும். மூட்டு வலி உணரப்படலாம். பொதுவாக எலும்பு பலவீனத்தை அதற்கான Dexa ஸ்கேன் மூலம் தான் கண்டுபிடிக்க முடியும். இப்போதெல்லாம் 23 வயதில் இளைஞர்களுக்குக் கூட முடக்கு வாதம் வருகிறது. ஆனாலும் அதற்கு நல்ல சிகிச்சை வந்துவிட்டது.

எலும்புப் பாதுகாப்பு எச்சரிக்கைக் குறிப்புகள் என்ன?

வாகன ஓட்டிகள் எப்போதும் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. அவசரத்தை வேகம் என்று கருதக்கூடாது.மிதமான வேகம் மிக நன்று. எப்போதும் வழக்கமாகச் சொல்வது போல் சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி, நேராக அமர்ந்திருத்தல் போன்றவை நல்லது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிற வேண்டும். எப்போது எங்கே அடிபட்டாலும் பாதிக்கப்பட்ட எலும்பை அசைக்கவோ நகர்த்தவோ கூடாது. அசையாமல் வைத்து இருக்க வேண்டும். அதன் பிறகுதான் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். ஒரு எலும்பு முறிவு பிரச்சினையில் வெற்றி என்பதே பாதிக்கப்பட்ட இடத்தை அசையாமல் வைத்திருப்பதில்தான் உள்ளது. சிகிச்சைக்குப் பிறகும் கட்டுப் போட்ட பிறகும் அந்த இடத்தை எவ்வளவு அசையாமல் பாதுகாப்பாக வைத்திருக்கிறோமோ அவ்வளவு விரைவில் சரியாகும்.

எலும்பில் அடிபட்டால் முறிவு ஏற்பட்டால் அலட்சியம் கூடாது. எவ்வளவு விரைவாக வேண்டுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனை செல்ல வேண்டும்.அசைக்கக் கூடாது. ஏனென்றால் உடைபட்ட எலும்பு நரம்பைப் பாதிக்கக்கூடும். எலும்பு உடைந்து சில நேரம் நரம்பிற்குள் ஊடுருவும். அதன் விளைவாக வரும் ஆறாத புண் ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். எனவே, சர்க்கரை அளவு கூடாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் .

எலும்பு சார்ந்த ஆர்த்தோ துறையில் மருத்துவ முன்னேற்றம், வரம் என்று எதைச் சொல்லலாம்?

எலும்பு முறிவுகளுக்கெல்லாம் நல்ல சிகிச்சைகள் வந்து விட்டன. மூட்டு மாற்று சிகிச்சை நல்ல மேம்பாடு அடைந்திருக்கிறது. முடக்குவாதத்தால் நான்கு ஆண்டுகள் சர்க்கரை நாற்காலியில் இருந்தவர்களுக்குக் கூட இப்போது மூட்டு அறுவை சிகிச்சை மூலம் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடிகிறது .இது மருத்துவத்தில் ஒரு பெரிய சாதனைதான்.

உங்கள் பணி அனுபவத்தில் மனதில் பாதித்த அனுபவம் ஒன்றைக் கூற முடியுமா ?

என்னிடம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அந்தக் குழந்தைக்கு இடுப்பு இணைப்பு அறுவை சிகிச்சை செய்தேன். அதை இரண்டு முறையாகச் செய்ய வேண்டியிருந்தது. அதற்காகவே என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்கள். சிசிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது. ஊருக்குச் செல்லும் போது அந்த பெண்மணி என்னிடம், “இனி உங்களைப் பார்க்கவே கூடாது என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் குழந்தை சிகிச்சைக்கு முன்பு பட்ட பாடுகளையும் வலியையும் நினைத்து அப்படிச் சொல்கிறார் என்று நான் அதை இயல்பாக எடுத்துக் கொண்டேன்.

சில மாதங்களுக்குப் பிறகு வேறு விஷயமாக இந்தியா வந்தவர், என்னைச் சந்திக்க வந்தவர், ‘’நான் கடைசியில் உங்களிடம் அப்படிச் சொல்லி இருக்க கூடாது ”என்று மிகவும் வருத்தப்பட்டார். மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு விடை பெற்றுச் சென்றார். அதை என்னால் மறக்க முடியாது.

  • அபூர்வன்

இது போன்ற கட்டுரைகள் நிறைந்திருக்கும் ஞானகுரு யாக்கை ஆனி இதழ் படிக்க கீழேயிருக்கும் இணைப்புக்குள் நுழையுங்கள்.

Leave a Comment