புதிய சிந்தனை
பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் – என்று ’வளர்பிறை’ படத்தில் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியிருப்பார். இந்த பாடலில் சொல்லப்படும் பூஜ்ஜியம் என்பதே கடவுள் என்கிறது சீனாவின் டாவோயிஸம்.
அதாவது, எதுவுமே இல்லாத வெற்றிடத்தில் இருந்துதான் எல்லாமே உருவாகியிருக்க முடியும், அந்த எதுவுமே இல்லாத வெற்றிடமே இறைவன் என்பது டாவோ காட்டும் இறை தத்துவம்.
எத்தனை பெரிய வீட்டை அழகாகக் கட்டினாலும், அதனுள் இருக்கும் வெற்றிடத்தில்தான் மனிதர்கள் வசிக்க முடியும். சக்கரத்துக்கு எத்தனை ஆரக்கால்கள் இருந்தாலும், வெற்றிடத்தாலே அது சுற்றுகிறது. மண்ணால் செய்யப்பட்ட பானையில், அதனுள் இருக்கும் வெற்றிடமே தண்ணீர் சேமிக்க உபயோகமாகிறது.
ஒரு வெற்றிடத்தை யாராலும் புதிதாக உருவாக்க முடியாது, அழிக்கவும் முடியாது. ஆனால், வெற்றிடத்தை உபயோகிக்க முடியும். ஆகவே, மனசுக்குள் இருக்கும் வெற்றிடத்தை உபயோகத் தொடங்குவதே மகிழ்ச்சியை நோக்கிய பயணமாக இருக்கும்
அண்மையில் விஞ்ஞானமும் இதையே சொல்லியது. ஆம், விஞ்ஞான உலகின் உயரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக, ஹிக்ஸ் பாஸன் என்று பெயரிடப்பட்ட அணுத்துகள் வெற்றிடத்தில் இருப்பதற்கான தடயம் கண்டறியப்பட்டது. அதுவே, கடவுளின் துகள் என்று பெயரிடப்பட்டது. இந்த அணுத்துகள் வேறு ஒரு அணுத்துகளுடன் எப்படி கூட்டு சேர்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டால், பிரபஞ்சம் உருவானதை அறிந்துவிட முடியும் என்று நம்புகிறது விஞ்ஞானம்.
இந்த வெற்றிடமே விதைக்குள் மரத்தையும் மரத்துக்குள் விதையையும் வைத்திருக்கிறது. அந்த வெற்றிடத்தை உணர்வதே ஆன்மிகம். அந்த வெற்றிடத்துக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை, வெற்றிடத்துக்குத் தெரியாமல் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. இந்த வெற்றிடத்தை புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, இதனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.
முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவே பறவைகள் கூடுகளை கட்டத் தொடங்குகின்றன. ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவை, அதனை காலம்காலமாக செய்து கொண்டிருக்கிறது… யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள்…
அந்த யாரோ என்பது கடவுள் அல்லது வெற்றிடம். இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை, இரண்டும் ஒன்றுதான்.
அந்த வெற்றிடம் மனிதரின் மனசுக்குள்ளும் இருக்கிறது. எனவே, மனசுக்குள் வெற்றிடத்தை எட்டிப் பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் கடவுளே. மனசுக்குள் கடவுள் இருப்பதை அறிந்துகொண்டால், இனியெல்லாம் மகிழ்ச்சியே.